புலந்த்ஷாஹர்: உத்தரபிரதேசத்தை சேர்ந் பகுஜன் சமாஜ் நிர்வாகி ஒருவரின் சடலம் சாக்கு மூட்டையில் மீட்கப்பட்ட நிலையில், இவ்விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மாவட்டம் குர்ஜாவைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஹாஜி முகமது உமர் (70) என்பவர், காளிந்தி குஞ்ச் காலனியில் வசிக்கும் ஒருவரைச் சந்திப்பதற்காக பைக்கில் சென்றார். வெகுநேரமாகியும் மாலையில் அவர் வீடு திரும்பாததையடுத்து, அவரை அவரது உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டும், அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
பல இடங்களில் ஹாஜி முகமது உமரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உஸ்மாபூர் செல்லும் சாலையின் அருகே ஹாஜி முகமது உமரின் பைக் கிடந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதே பகுதியின் சிறிது தூரத்தில் சாக்கு பையில் சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்று தெரிந்தது.
போலீசார் சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, அதன் உள்ளே ஹாஜி முகமது உமரின் சடலம் இருந்தது. ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்கப்பட்டதால், அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.