Monday, September 9, 2024
Home » படூரில் கார் கவிழ்ந்து விபத்து 3 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி: இருவர் படுகாயம்

படூரில் கார் கவிழ்ந்து விபத்து 3 சட்டக்கல்லூரி மாணவர்கள் பலி: இருவர் படுகாயம்

by Ranjith


சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு சட்டப்படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை 3.30 மணிக்கு கல்லூரி முடிந்ததும் 4ம் ஆண்டு படிக்கும் மகா ஸ்வேதா (21), பவித்ரா (21), கர்லின் பால் (21), 3ம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் (23), சிவா (23) ஆகிய 5 பேரும் ஒரு காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளத்திற்கு சென்றனர்.

அங்குள்ள ஓட்டல் ஒன்றில் டீ குடித்து விட்டு படூர் புறவழிச்சாலை வழியாக காரில் வந்து கொண்டிருந்தனர். காரை மாணவன் சிவா ஓட்டி வந்துள்ளார். படூர் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் அருகே வந்தபோது, குறுக்கே நாய் ஒன்று வந்ததாக தெரிகிறது. படுவேகமாக வந்ததால் நாய் மீது மோதாமல் இருப்பதற்காக காரை இடதுபுறம் சிவா திருப்பி உள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையை விட்டு இறங்கி மின்னல் வேகத்தில் பறந்து தனியார் கல்லூரி வளாகத்தின் உள்ளே விழுந்து நொறுங்கியது.

இதில் காரில் இருந்த கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மகா ஸ்வேதா, பவித்ரா, திருச்சியைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த சிவா, மற்றொரு மாணவியான அந்தமானைச் சேர்ந்த கர்லின் பால் ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தனர். விபத்து நடந்த சத்தம் கேட்டதும் அவ்வழியே சென்றவர்கள் தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கிச் சென்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் கார் சுக்குநூறாக நொறுங்கிக் கிடந்ததால் கடப்பாரை உள்ளிட்ட சாதனங்களைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கிய 3 பேரின் உடல்களை மீட்டனர். விபத்து குறித்து அறிந்ததும் அவர்களுடன் படித்து வந்த கல்லூரி மாணவ, மாணவிகள், இறந்து கிடந்த சக மாணவர்களின் உடல்களை பார்த்து தேம்பி தேம்பி அழுதனர். இதையடுத்து, போலீசார் 3 மாணவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே பள்ளிக்கரணை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி, துணை ஆணையர் சமய் சிங் மீனா, கேளம்பாக்கம் உதவி ஆணையர் வெங்கடேசன் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காரை ஓட்டி வந்த மாணவன் ஏன் வேகமாக ஓட்டி வந்தார் என விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், காரை ஓட்டி வந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மாணவன் சிவா சென்னையைச் சேர்ந்த பிரபல பெண் வழக்கறிஞர் ஒருவரின் மகன் என்று கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

six + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi