கோவை: கோவையில் தாய் யானையை பிரிந்த 4மாத குட்டி யானையை மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் 3வது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்து தனியாக சுற்றி வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு பராமரித்து வருகின்றனர். மேலும் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் இறங்கிய வனத்துறையினர், வனப்பகுதியில் தாய் யானையை தேடி வருகின்றனர்.
இதற்காக டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து யானை பாகன்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குட்டி யானையுடன் பேசும் போது மழலை குரலில் குட்டி யானை பதில் அளிக்கும் காட்சி அங்கு உள்ளவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. தாய் யானையுடன் சேர குட்டி யானை ஒளி எழுப்ப ஏதுவாக இந்த பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் உள்ள குட்டி யானைக்கு பால், பழம் உள்ளிட்ட உணவுகளையும் வழங்கினர்.
இதனிடையே தாய் யானை இருப்பிடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்ததாக கூரப்பப்டுகிறது. எனவே யானை பாகன்கள் உட்பட 6பேர் கொண்ட குழுவினர் குட்டி யானையுடன் தாய் யானை இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். ஒருவேளை இன்று தாய் யானையோடு சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தால் குட்டி யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமிற்கு அனுப்பவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.