அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் 1008 பெண்கள் பங்கேற்ற சரவிளக்கு பூஜை: நாளை தேரோட்டம்

திருவொற்றியூர்: சென்னை மணலி புதுநகரில் பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாத 10 நாள் திருவிழாவில், எட்டாம் திருவிழாவை முன்னிட்டு, தங்களின் வீடுகளில் செய்து, கோயிலுக்கு கொண்டு வந்த லட்டு, அதிரசம், பணியாரம் உள்பட பல்வேறு வகையான பலகாரங்கள், பழம், பூக்கள் என 1008 சீர்வரிசை தட்டுகளுடன் அய்யா வைகுண்ட தர்மபதிக்கு படையல் வைத்து ஏராளமான பக்தர்கள் செண்டை மேளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்து படையலிட்டனர். பின்னர், அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் 8ம் நாளான நேற்றிரவு 1008 பெண்கள் பங்கேற்ற சரவிளக்கு பூஜை மற்றும் பணிவிடை கோலாகலமாக நடந்தது. இதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெறுகிறது.

இக்கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் புரட்டாசி திருவிழாவில் காளை, அன்னம், கருடர், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம் ஆகிய வாகனங்களில் அய்யா வைகுண்டர் பதிவலம் வந்தார். சன்னிதி வாயிலில் இருக்கும் பிரமாண்ட சரவிளக்குகள், கதவில் உள்ள 108 திருவிளக்குகளும் ஏற்றப்பட்டு, ஒளி வெள்ளத்தில் அய்யா வைகுண்ட தர்மபதி எழுந்தருளினார். கோயில் வளாகத்தில் 1008 பெண்கள் வரிசையாக அமர்ந்து விளக்கேற்றி, திருக்கல்யாண ஏடு வாசிப்பை உச்சரித்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், முன்னாள் எம்பிக்கள் எஸ்.ஆர்.ஜெயத்துரை. ஞானதிரவியம், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன், திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி.அருணாசலம் டி.விஜய் அருண், திருச்செந்தூர் அய்யா வைகுண்ட அவதாரபதி தலைவர் எஸ்.தர்மர், கோவை அய்யா வைகுண்டர் சிவபதி கே.அரிராமன், எச்.ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ராஜேந்திரன், டிஎஸ்எஸ் நாடார்கள் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.பி.மனோகரன், தொழிலதிபர்கள் எஸ்.ரங்கசாமி நாடார், பி.துரைப்பாண்டியன், பிரசாத் கிருஷ்ணன் உள்பட தமிழகம் முழுவதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி.துரைப்பழம், பொது செயலாளர் ஏ.சுவாமிநாதன், பொருளாளர் பி.ஜெயக்கொடி, கூடுதல் செயலாளர் டி.ஐவென்ஸ், துணை தலைவர் வி.சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே.ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்