மும்பை: அயோத்தியில் புதிதாக கட்டப்படும் ராமர் கோயில் திறக்கப்படும்போது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் போன்ற சம்பவம் நிகழலாம் என்றும் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே எச்சரித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த விழாவிற்கு அரசு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் ரயில்களிலும் பஸ்களிலும் இதர வாகனங்களிலும் அயோத்திக்கு வரவழைக்கலாம் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
அவர்கள் திரும்பி வரும் போது கோத்ரா போன்ற சம்பவம் நிகழக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி கரசேவகர்கள் அயோத்தியில் இருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர். குஜராத் மாநிலம் கோத்ராவில் இந்த ரயில் எரிக்கப்பட்டு கரசேவகர்கள் பலர் உயிர் இழந்தனர். இதனை தொடர்ந்து குஜராத் முழுவதும் பயங்கர கலவரம் வெடித்தது. இதைத்தான் உத்தவ் தாக்கரே சுட்டிக்காட்டுகிறார்.