இந்தூர்: மத்தியப்பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பகாவா கிராமத்துக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் சம்பத் ராய் கடந்த ஞாயிறன்று சென்றிருந்தார். அயோத்தியா வளாகத்தில் அமைக்கப்பட உள்ள சிவன்கோயிலுக்கான சிவ லிங்கத்தை இறுதி செய்வதற்காக அவர் வந்திருந்தார்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சம்பத் ராய் கூறுகையில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் மூலமாக அரசுக்கு ரூ.400கோடி சரக்கு மற்றும் சேவை வரி கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். 70 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த வளாகத்தில் சுமார் 18 கோயில்கள் கட்டப்படும். இந்த கட்டுமான பணிகளுக்காக அரசுக்கு செலுத்த வேண்டிய 100 சதவீத வரியையும் செலுத்துவோம். இதில் ஒரு ரூபாய் கூட குறைக்கப்படாது” என்றார்.