புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுக்கின்றனர். நேற்று பக்ரீத் விடுமுறை தினத்தை முன்னிட்டு 40 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது திடீரென பால் குளிரூட்ட பயன்படுத்தக்கூடிய அமோனியா வாயு செல்லும் பைப் லைனில் கசிவு ஏற்பட்டது. இதனால் ஊழியர்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஊழியர்கள் பதறியடித்து வெளியேறினர். அப்பகுதி மக்களும் இந்த பாதிப்புக்கு ஆளாகினர். தகவலறிந்து வந்த புதுக்கோட்டை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி கசிவை நிறுத்தினர்.