ஆவினில் முறைகேடுகள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட செய்தி தவறானது: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: 01.09.2024, 02.09.2024 அன்று சில தனியார் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் வரப்பெற்ற செய்தியில் தற்பொழுது ஆவினில் முறைகேடுகள் நடைபெற்றதாக வெளியிடப்பட்ட செய்தி தவறானது ஆகும்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் செயல்பட்டு வரும் கோப்பம்பட்டி பால் தொகுப்பு குளிர்விப்பான் மையத்தின் மூலம் கிளைச் சங்கங்களிலிருந்து பால் கொள்முதல் செய்து வந்த வாகனத்தின் ஓட்டுநரால் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வதாக 15.03.2024 அன்று திரு.ஜான் ஜஸ்டின் தேவசகாயம், விரிவாக்க அலுவலரால் அலைபேசி மூலம் வீடியோ பதிவு செய்து துணைப்பதிவாளர் மற்றும் பொது மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அன்றைய தினமே மேற்படி கிளைச் சங்கங்களின் பாலினை அருகில் உள்ள பால் குளிர்விக்கும் மையத்திற்கு கொண்டு செல்ல வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டு உடனடியாக பால் சேகரம் செய்யும் வாகனம் ரத்து செய்து கோப்பம்பட்டி தொகுப்பு பால் குளிர்விக்கும் மையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பின்பு செல்லம்பட்டி பால் சேகரிப்பு குழுத் தலைவர் அவர்கள் மூலம் பால் கொள்முதல் அதிகரித்து வருவதால் அதனை மீண்டும் திறக்கலாம் என பரிந்துரை செய்தததின் வாயிலாக ஆவின் அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் மூலம் அப்பால் குளிர்விக்கும் மைய கிளைச் சங்கங்களின் கூட்டம் நடத்தப்பட்டு அவர்களின் ஒப்புதலோடு மீண்டும் அப்பால் குளிர்விக்கும் மையத்தினை செயல்படுத்த பொது மேலாளரால் அனுமதி வழங்கப்பட்டு தற்பொழுது நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. மேற்படி விரிவாக்க அலுவலர் தான் சினிமாத் துறையில் நடிக்கப் போவதாக கூறி 3 மாதங்களாக விடுப்பில் இருந்து மீண்டும் 14.07.2024 அன்று மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார்.

மேலும், இவர் 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஆவின் பால் விற்பனை மண்டல அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த பொழுது பால் மற்றும் பால் உப பொருட்கள் விற்பனை செய்த தொகையை ஆவினில் செலுத்தாமல் இவரே தன் கைவசம் வைத்திருந்தார் என தணிக்கையில் மறுக்கப்பஅது தொடர்பாக பிரிவு-81ன் கீழ் விசாரணைப் பணி மேற்கொள்ளப்பட்டு, அவ்விசாரணை அறிக்கையின்படி இத்தொகைக்கு இவரே முழுப்பொறுப்பு என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவர் மீது பிரிவு 87-ன் கீழ் தண்டவழக்கு நடவடிக்கை மேற்கொண்டு அத்தொகையினை வட்டியுடன் அவரிடமிருந்து பிடித்தம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை அவரது மாதச் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடித்தம் செய்ய பொது மேலாளரால் உத்தரவிடப்பட்டு இவரது மாதச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையினை பிடித்தம் செய்ததன் காரணமாக இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் ஆவினில் நடைபெற்ற நிகழ்வுகளையும், 2021ம் ஆண்டு ஆவினில் பால் பாக்கெட் கெட்டுப்போய் விட்டதாக வந்த ஊடகச் செய்தி மற்றும் பால் லாரிகளில் டீசல் திருடப்படுகிறது என ஊடகங்களில் வரப்பெற்ற தவறான செய்திகளையும் சேர்த்து மேற்படி நிகழ்வுகள் அனைத்தும் தற்பொழுது ஆவினில் நடைபெறுவதாக கூறி தனியார் தொலைக்காட்சிகளில் ஆவினின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது போன்ற தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார். தன்மீது உள்ள தவறுகளை மறைக்கும் நோக்கத்திலும் உயர் அதிகாரிகளின் நற்பெயறுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்திலும் போலியான செய்திகளை பரப்பி வருகிறார். மேலும், ஆவினில் நீண்ட காலத்திற்கு முன்பு நடைபெற்றுள்ள மேற்படி நிகழ்வுகளுக்கு அவ்வப்போது ஆவின் நிர்வாகம் மூலமாக கீழ்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. பாலில் தண்ணீர் கலப்படம் செய்த வாகன ஓட்டுநரை பணியில் இருந்து நீக்கம் செய்து வாகன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

2. ஆவின் மூலம் விற்பனை செய்த பால் பாக்கெட்டுகளில் கசிவு ஏற்பட்ட பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக புதிய பால் பாக்கெட்டுக்கள் முகவர்களுக்கு மாற்றி தரப்பட்டுள்ளது.

ஆவின் நிருவாகத்தின் மூலம் முன்பு நடந்த நிகழ்வுகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவிட்ட நிலையில் ஆவின் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட இச்செய்தி தவறனாது என ஆவின் நிர்வாகத்தின் மூலம் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு