நாகர்கோவில்: ஆவணி மாதம் கடைசி ஞாயிறையெட்டி நாகர்கோவில் நாகராஜா கோயிலில் இன்று காலை பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டில் நாகதோஷம் தீர்க்கும் தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும் நாகர்கோவில் நாகராஜா கோயில் விளங்குகிறது. இதனால் இங்கு பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் வழிபாட்டிற்கு வருகை தருகின்றனர். இங்குள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக தாங்களே பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துகின்றனர்.
பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுகிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அப்போது குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி ஞாயிறுகளில் நாகர்கோவில் நாகராஜா கோயிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடந்து வருகிறது. ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை இன்று ஆகும். அந்த வகையில் இன்று நாகராஜா கோயிலில் இன்ற காலை முதலே பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். தொடர்ந்து ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். நாகராஜா சன்னதிக்கு வெளியே நாகர்சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பொடி தூவியும் வழிபாடுகள் நடத்தினர்.