Monday, September 9, 2024
Home » ஆவடி அருகே 24 மணி நேரத்தில் திருடன் அதிரடி கைது

ஆவடி அருகே 24 மணி நேரத்தில் திருடன் அதிரடி கைது

by Arun Kumar

ஆவடி: ஆவடி அருகே வீராபுரத்தில் ஒரே நாள் இரவில் 2 இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.ஆவடி அருகே வீராபுரம், பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (48). தனியார் நிறுவன ஊழியர். இவர் அம்பத்தூரில் தனது குடும்பத்துடன் வசிப்பதால், வீராபுரத்தில் உள்ள வீடு பூட்டியே கிடந்துள்ளது. இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவில் பூட்டி கிடந்த சுரேஷ்பாபுவின் வீட்டை 3 மர்ம நபர்கள் உடைத்து திருட முயற்சித்தனர்.

அப்போது எதிர்வீட்டில் வசிக்கும் பிரவீன்குமார் என்பவர் சத்தம் போட்டதால், அங்கிருந்து 3 மர்ம நபர்களும் தப்பி சென்றுவிட்டனர். பின்னர் அதே 3 மர்ம நபர்கள், அங்குள்ள பெருமாள் கோவில் தெருவில் வசிக்கும் ரவி (35) என்பவரின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.அங்கு ரவியும் அவரது தாயும் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவை முன்பக்கமாக தாழிட்டு, மற்றொரு அறையை உடைத்து, அங்கு ரவியின் சட்டைப் பையிலிருந்து ரூ.13 ஆயிரம் ரொக்கப் பணத்தை 3 மர்ம நபர்களும் திருடி சென்றுவிட்டனர்.

மேலும், அதே பகுதியில் டிவிகே நாயுடு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் (38) என்பவரின் வீட்டை 3 மர்ம நபர்களும் உடைத்து, அங்கு பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கப் பணம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கவரிங் நகையைத் திருடிக்கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டனர். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 2 வீடுகளை உடைத்து திருட்டு நடைபெற்றதால் அங்கு பரபரப்பு நிலவியது. இப்புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, 3 மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக நேற்று மாலை ஆவடி அருகே மோரை பகுதியை சேர்ந்த விக்கி (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை 24 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

thirteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi