திருவாடானை: திருவாடானை அருகே பண்ணவயல் எல்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (48). இவர் பெயின்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது மகளான தேசிகாமணி (22) என்பவருக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த சான்றிதழுக்காக கடந்த சில தினங்களாக திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த பெயின்டர் கிருஷ்ணமூர்த்தி தாலுகா அலுலகம் முன் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி கிருஷ்ணமூர்த்தியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Dhanush Kumar
கீழக்கரை: தாதனேந்தல் ஊராட்சி தலைவர் கோகிலா ராஜேந்திரன். இவர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்று நட்டு குறுங்காடு உருவாக்கி, தோட்டக்கலை பூங்கா பராமரித்து வருகிறார். இத்தகைய சேவைகளை கவுரவித்து ஊராட்சிக்கு 9 விருது கிடைக்கப்பெற்றுள்ளது. தாதனேந்தல், பச்சேரி, பொக்காரனேந்தல், கைகொள்வார் மடம், முத்துவீரப்பன் வலசை கிராம மக்கள், ஊராட்சி தலைவரின் சேவையை மேலும் ஊக்விக்கும் விதமாக நாட்டியக்குதிரை பரிசளித்தனர் 100 நாள் வேலை திட்ட துாய்மைப் பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட ஊராட்சி பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். ஆடவர், மகளிர் கபடி, மாரத்தான் போட்டிகளில் முதல் 2 இடம் பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது டாக்டர் சையது சுல்தான் முஹமது தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. .
வாழப்பாடி: வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், வீடு வீடாக சென்று இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பின் கீழ், திராவிட மாடல் ஆட்சியின் நலத்திட்டங்களை எடுத்துக்கூறி திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய அவைத்தலைவர் சோலை கோவிந்தன், நிர்வாகிகள் சேட்டு, மாவட்ட பிரதிநிதி ஜெயராமன், மாவட்ட துணை அமைப்பாளர் பழனிசாமி, புழுதிகுட்டை ஊராட்சி தலைவர் அறிவழகன், குறிச்சி ஜெயபிரகாஷ், அத்தனூர்பட்டி ஊராட்சி தலைவர் பாரதி, மகேஷ், செந்தில்குமார், ஆனந்தன், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலூர்: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில், எள் சாகுபடி விவசாயிகள் அதிக பயனடைய விதை ஆய்வு பிரிவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து, சேலம் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி, பல்வேறு ஆலோசனைகளை தெரிவித்துள்ளார். விவசாயிகள் சிவப்பு எள் வகையான டிவிஎம்-4 ரகம், வெள்ளை எள் ரகங்களான அஸ்பின் 3, சுபிக்ஷா மற்றும் எஸ்விபிஆர் 1, கருப்பு எள் ரகமான டிவிஎம் 3, பிளாக் கோல்ட், புதிய சிவப்பு எள் ரகமான டிவிஎம் 7 ஆகியவற்றை பயிரிட்டு வருகின்றனர். தரமான விதைகள் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து விதை குவியல்களில் இருந்தும் விதை ஆய்வாளர்களால் அலுவலக மாதிரிகள் எடுக்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற விதைகள் மட்டுமே விநியோகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுவரை 150 மாதிரிகள் எடுக்கப்பட்டு, முளைப்பு திறன் பரிசோதனைக்கும், இனத்தூய்மை பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 94 எண்கள் அலுவலக மாதிரிகள் எடுத்து தரம் உறுதி செய்யப்பட்டது. இவற்றில் தரமற்றதாக அறிவிக்கப்பட்ட 280 கிலோ கொண்ட நான்கு விதை குவியல்கள் விற்பனை தடை செய்யப்பட்டது. தரத்தை உறுதி செய்து அறிக்கை பெறப்பட்டவுடன், விற்பனை செய்வதால் தரமான விதை மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் பெறக்கூடும் என விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார்.
சேலம்: சேலம் கோட்டை மைதானத்தில் அகில இந்திய விவசாயிகள் மகா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அன்பு தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன், மாவட்டச் செயலாளர் வேல்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் ஜருகுமலை மற்றும் ஜல்லூத்துமலை அடிவாரங்களில் தரிசாக காடுகளாக கிடந்த 1400 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களில் சூரியூர் அத்திபட்டி கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி, மலைவாழ் மக்கள், தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பனமரத்துப்பட்டி ஏரியின் நிலங்களை சிலர் ஆக்கிரமித்து விட்டதாக 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கொடுத்தனர். இதையடுத்து, 500க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகள் நீண்ட காலமாக பயிரிட்டு வந்த அவரவர் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டனர். அந்த நிலங்களை ஏற்கனவே பயிரிட்டு விவசாயம் செய்து வந்த ஏழை விவசாய குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் உமா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 541 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உமா, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 4 பயனாளிகளுக்கு தலா ₹6,690 வீதம் ₹26,760 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
திருச்செங்கோடு: திருச்செங்கோடு சந்தைப்பேட்டை காவிரி நீரேற்றும் நிலையத்தை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். திருச்செங்கோடு நகராட்சி சந்தைப்பேட்டை பகுதியில், அமைந்துள்ள நீரூந்து நிலையத்தை, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர்கள் புவனேஸ்வரி ரமேஷ், ரவிக்குமார், ரமேஷ், வார்டு செயலாளர் பிரவீண் ஆகியோர் உடனிருந்தனர். கோடை காலம் நெருங்கும் முன்பே குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. போதிய குடிநீர் தர திருச்செங்கோடு நகராட்சி சார்பில், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடிநீரை வீணாக்க கூடாது எனவும், குடிநீர் குழாய்களில் கசிவும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டார்.
திருச்செங்கோடு: திராவிட மாடல் அரசின் சாதனைகளை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும் என, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024 2025ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் சிறப்பம்சங்களை வீடுகள்தோறும் கொண்டு சேர்க்கவும், ஒன்றிய பாஜ அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை எடுத்துரைக்கும் வகையில், இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் நடத்தப்படும் திண்ணைப் பிரசாரக் கூட்டத்தில், இல்லங்களில் உள்ள குடும்பத்தலைவிகளிடம், மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் புதுமைப் பெண் திட்டம், பஸ்களில் மகளிர் இலவச பயணம், சிறார்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம், இந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்த கல்லூரி மாணவர்களுக்கான மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், தமிழ் புதல்வன் திட்டம் என்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனை திட்டங்களை எடுத்துக் கூறிடவேண்டும். எனவே, இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பாக முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறும், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் நாள்தோறும் நடைபெரும் திண்ணை பிரசார கூட்டங்களை ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராயக்கோட்டை: ராயக்கோட்டை பகுதியில் தக்காளி நாற்று நடவு பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டிகளுக்கு, மார்ச் மாதம் முதல் தக்காளி வரத்து அதிகரிக்கும். பல்வேறு பகுதிகளில் தக்காளி சீசன் முடிவுக்கு வரும் நிலையில், ராயக்கோட்டை பகுதியில் விளைச்சலுக்கு வரும் என்பதால், வியாபாரிகள் இங்கு வந்து தக்காளியை மொத்தமாக வாங்கிச் செல்வர். இங்கிருந்து நாடு முழுவதும் தக்காளி சப்ளை செய்யப்படுகிறது. சீசனை எதிர் நோக்கி, ராயக்கோட்டையில் தற்போது தக்காளி சாகுபடி பணியை விவசாயிகள் முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக சொட்டு நீர் பாசனம் அமைத்து, தக்காளி நாற்று நடவு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். குறைந்த நீராதாரத்திலும் நாற்றுகள் செடியாகி பூ விட்டு காய் பிடித்து இரு மாதங்களில் அறுவடைக்கு வரும். அப்போது, மற்ற பகுதிகளில் தக்காளி சீசன் ஓய்ந்திருக்கும் நிலையில் சந்தையில் ராயக்கோட்டை தக்காளி விற்பனை களை கட்டும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
சமூக பொறுப்புணர்வு தேசிய மாநாடு
சூளகிரி: சூளகிரி அருகே பண்ணப்பள்ளி ஊராட்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் கேட்டு வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து தொகுதி வளர்ச்சி நிதியில், ₹15.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, முதுகுறுக்கி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வேப்பனஹள்ளி கே.பி.முனுசாமி எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும், குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வி ராமன், காவேரிப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், சைலேஷ் கிருஷ்ணன், ஓசூர் மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், நாராயணப்பா, நாகேஷ், அப்பையா, லோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.