பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் காயம் காரணமாக விலகியுள்ளார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு நீண்ட ஓய்வில் இருந்த நடால் (37 வயது), பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் மீண்டும் களமிறங்கினார்.
இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் தோல்வியைத் தழுவிய அவர், ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ஜோர்டன் தாம்சனிடம் போராடி தோற்றார். இந்த போட்டியின்போது இடது காலில் காயம் அடைந்ததைத் தொடர்ந்து நடாலுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தசை கிழிந்திருப்பது உறுதியானதை தொடர்ந்து, உடனடியாக நாடு திரும்பும் அவர், மெல்போர்னில் நடைபெற உள்ள ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் இருந்து (ஜன. 14-28) விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.