மராட்டியம்: முகலாய மன்னர் ஹௌரங்கசிப்பை புகழ்ந்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்ததை கண்டித்து இந்துத்துவ அமைப்புகள் வைத்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து சில இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தன.
இதற்கு இந்துதுவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் சிலர் தங்களது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் உட்பட சமூக வலைத்தளங்களில் அவுரங்கசீப் படத்தை வைத்துள்ளனர். இதற்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த இந்துதுவ அமைப்பினர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று கோலாப்பூரில் கடையடைப்பு அறிவிக்கப்பட்டதுடன் போராட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் போராட்டத்திற்காக கூடிய இந்துதுவ அமைப்புகளை சேர்ந்த சிலர் மூடி இருந்த கடைகள் மீது கற்களை எறிந்தனர். இதனால் பதற்றமான சூழல் உருவான நிலையில் வன்முறையில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. இதனிடையே போஸ்டர் ஒட்டிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பதற்றத்தை தூண்டக்கூடிய வகையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக மராட்டிய காவல்துறை விளக்கமளித்துள்ளது.