அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ போலி பிளாக்மெயில் கும்பலின் முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

சென்னை: அண்ணாமலை வெளியிட்ட ஆடியோ போலியானவை, பிளாக்மெயில் கும்பலின் முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோ கிளிப்பில் உள்ள எந்த செய்தியையும் எந்த ஒரு தனி நபரிடமோ, தொலைப்பேசி உரையாடலிலோ அல்லது தனிப்பட்ட உரையாடலிலோ நான் கூறவில்லை என்று உறுதியாக கூற விரும்புகிறேன். இந்த உரையாடல் தங்களுடன் நடந்தது என்று சொல்ல இதுவரை யாரும் முன்வராதது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜ மாநில தலைவர் யாரோ ஒருவர் குறிப்பிட்ட எந்த நபருடனும் சொல்லாத ஒன்ரை ஆடியோவாக வெளியிடும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கியுள்ளார். இது தான் அவரது அரசியலின் தரம்.

அதேபோல, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நாங்கள் ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளில் பல வரலாறு காணாத சாதனைகளையும், புதிய திட்டங்களையும், ஒரு மனிதாபிமான நிர்வாகத்தையும் அளித்துள்ளோம். இதனையே நாங்கள் திராவிட மாடல் ஆட்சி என்கிறோம். அதேபோல உயரிய இலக்குகளை அடைய நாங்கள் மிகப்பெரிய நிதி சீர்திருத்தங்களை மேற்கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனைகளில் 2 ஆண்டுகளில் சாதித்துள்ளோம். இது கடந்த பத்து ஆண்டுகளாக ஒன்றிய பாஜ அரசு செய்தவற்றை விட மகத்தான சாதனை. இதனை நேரடியாக ஒப்பிட்டு பார்த்தாலே திராவிட மாடல் ஆட்சியின் செயல் வேகம் தெரியும். இத்தகைய சாதனைகளை சில சக்திகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவே, அவர்கள் (பாஜக) எங்களது சிறப்பான பணிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நவீன தொழில்நுட்பத்தை மலிவான யுத்திக்காக பயன்படுத்தி இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதேபோல, முதல்வர் தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கையாக மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டிற்கே வழிகாட்டும் ஒளியாக இருக்கிறார். எங்களது நம்பிக்கை நட்சத்திரமான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மகத்தான வரவேற்பை பெற்றுள்ளார். இதைப்பார்த்து அவரை அமைச்சராக்க வேண்டும் என்று தலைவரிடம் வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். மேலும், அனைவரது எதிர்ப்பார்ப்பையும் விஞ்சி அமைச்சர் உதயநிதி செயல்பட்டு வருகிறார். முதல்வரைப் போலவே கள ஆய்வும் சிறப்பாக நடத்தி வருகிறார். அதன்படி, தமிழக விளையாட்டு துறையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இப்படிப்பட்ட ஆற்றல்மிகு செயல்வீரரைக் குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்.

இதேபோல, நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஓரணியாக ஒன்றுபட்டு மகத்தான சாதனைகளை எய்தும் வண்ணம் செயல்பட்டு வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் நான் ஏன் அவர்களை பற்றி தவறாக பேச வேண்டும்? நான் அரசியலுக்கு வந்தது முதல் எனக்கு நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் உறுதுணையாகவும் இருப்பவர் சபரீசன். எதிர்க்கட்சிகள் கூட உதயநிதி மற்றும் சபரீசன் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை. எனவே, அவர்கள் மீது களங்கம் சுமத்தும் வீண் முயற்சியில் இதுபோன்ற ஜோடிக்கப்பட்ட ஆடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

மேலும், இவர்களிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலமாக தங்களது அரசியல் எண்ணங்களை நிறைவேற்றத் துடிக்கிறது. ஒரு பிளாக் மெயில் கும்பல். ஆனால், இது போன்ற கோழைத்தனமான முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. திமுக தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம். அறம் வெல்லும்.
இவ்வாறு அவர் அறிக்கை விடுத்துள்ளார். திமுக தொடங்கிய காலத்திலிருந்தே, ஒரே இயக்கம், ஒரே கட்சி, ஒரே குடும்பம் என அனைவரும் ஒற்றுமையுடன் இயங்கி வருகிறோம். இனி வரும் காலங்களிலும் அவ்வாறே தொடர்வோம்.

Related posts

இஸ்லாமாபாத் செல்கிறாரா பிரதமர் மோடி?.. எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்த பாகிஸ்தான்

நடிகர் சித்திக்கிற்கு எதிரான ஆதாரம்?

செல்போன் டவரின் பேட்டரிகளை திருடி விற்றவர் கைது