நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி விவகாரம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ சேவையை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது, மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி, இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி இணை இயக்குனர் மணவாளன் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: மூச்சுப் பயிற்சி, யோகா உள்ளிட்ட இயற்கை சார்ந்த மருத்துவ சேவைகளை முதியோர்களுக்கு வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிறகு சென்னை கிண்டி கிங் ஆகிய 2 இடங்களில் மட்டுமே இதுவரை தேசிய முதியோர் நல மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 200 படுக்கைகளுடன் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நீட் தேர்வில் எந்தவித குளறுபடியும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்த கருத்தும், அதற்கான விளக்கமும் திருப்திகரமாக இல்லை. நீட் தேர்வில் மதிப்பெண் வழங்குவதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளது. வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் பல்வேறு சந்தேகம் எழுந்துள்ளது. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக ஒன்றிய அரசு நீட் தேர்வு விவகாரத்தில் கருத்துகளை பதிவு செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

காவேரி மருத்துவமனை, டிசிஎஸ் நிறுவனம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 5000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு