இலங்கை நாட்டை சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது மீனவர்களின் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்திடும் வகையில் உள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, இத்தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி