3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்

கொல்கத்தா: கொல்கத்தாவில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஜூனியர் டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ெதாடர் போராட்டம் நடத்தினர். முதல்வர் மம்தா தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கிட்டத்தட்ட 10 நாட்கள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தை ஜூனியர் டாக்டர்கள் முன்னெடுத்துள்ளனர். அவர்கள் கொல்கத்தாவில் நேற்றிரவு ஆர்.ஜி.கார் மருத்துவமனையிலிருந்து ஷியாம்பஜார் வரை தீப்பந்தம் ஏந்தி பேரணியாக சென்றனர்.

இதுகுறித்து ஜூனியர் டாக்டர்கள் கூறுகையில், ‘கொல்கத்தா மருத்துவக் கல்லூரி சம்பவத்தை தொடர்ந்து, சாகர் தத்தா மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததையடுத்து மூன்று மருத்துவர்கள் மற்றும் 3 செவிலியர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது. அதனால் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மருத்துவமனைகளில் எங்களின் பாதுகாப்பு குறித்து தலைமைச் செயலாளரைச் சந்தித்து 10 நாட்களாகியும், இதுவரை எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. பெண் மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு நாளை (இன்று) சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வருகிறது. அப்போது எங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைத்தால், போராட்டத்தை மறுபரிசீலனை செய்வோம். இல்லையெனில் முழு அளவிலான போராட்டம் நடத்துவோம். அக்டோபர் 2ம் தேதி மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்’ என்றனர்.

 

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!