சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்; அதுவரை உச்சநீதிமன்றம் 2018 இல் தனது ஆணையில் குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 2012 ஆம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம்’ சட்டவிரோதக் கூட்டம் (திருமண சுதந்திரத்தில் தலையிடுதல்) தடுப்புச் சட்டம் என்ற சட்ட மசோதாவை உருவாக்கியது. ஆனால் அந்த மசோதாவை சட்டமாக்காமல் இந்திய ஒன்றிய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வருவதால் அந்த சட்ட மசோதாவைத் தமிழ்நாடு அரசு சட்டமாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சாதிஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் எனவும், அதுவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்
previous post