சென்னை: விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக் கூடிய காயங்களை கண்டறியக் கூடிய உள்நாட்டு கையடக்க அல்ட்ராசவுண்ட் ஸ்கேனரை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். விளையாடும்போது ஏற்படக்கூடிய காயங்களைக் கண்டறிதல் மற்றும் மேலாண்மைக்காக உள்நாட்டுத் தயாரிப்பான கையடக்க ‘பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட்’ ஸ்கேனர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் தொடர்பான தொழில்நுட்பங்களுக்கு பல்வேறு காப்புரிமைகள் ஏற்கனவே பெற்றுள்ள நிலையில், உற்பத்திக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த சாதனத்தைப் பயன்படுத்தி ஆடுகளத்திலேயே வீரர்களில் காயங்களைக் கண்டறியவும், காயத்தின் அளவை உடனடியாக மதிப்பிடவும் முடியும். காயமடையும் விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா என அப்போதே மருத்துவ நிபுணர்கள் முடிவெடுக்கவும் முடியும். செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இந்த ‘போகஸ்’ ஸ்கேனரில் விளையாட்டு மருத்துவம் தொடர்பாக அதிக அளவிலான பயன்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த தயாரிப்பின் முன்மாதிரியை நிறைவுசெய்து, அதனை விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து ஆடுகளத்தில் இருந்து பரிசோதித்தல் மற்றும் சோதனையின் தரவுகளை சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், விளையாட்டு மருத்துவம் என்பது, ஆடுகளத்தில் விளையாடும்போது ஏற்படும் காயங்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதில் நுட்பமாக கவனம் செலுத்தும் நிபுணத்துவமாகும். உள்நாட்டுத் தயாரிப்பில் கவனம் செலுத்தும் வகையில் முழு முயற்சியோடு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம் என்றனர்.