பந்தலூர், ஏப்,19 : பந்தலூர் அருகே அத்திக்குன்னு பகுதியில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்படுத்திய அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்திற்கு கட்டிடம் கட்ட ஆ.ராசா எம்பி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அரசு ஆரம்பப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து தற்போது அந்த திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல ஆயிரக்கணக்கான அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பந்தலூர் பகுதிக்கு வருகை தந்த நீலகிரி எம்பி ஆ.ராசா பந்தலூர் அருகே அத்திக்குன்னு அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் காலை சிற்றுண்டி உணவு சமைப்பதற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
நெல்லியாளம் நகராட்சி சார்பில் ரூ.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டும் பணி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கு நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் பிரான்சீஸ் சேவியர் தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் சிவகாமி, கவுன்சிலர் ஆலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா முபாரக், முன்னாள் எம்எல்ஏ திராவிடமணி, தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம், நெல்லியாளம் நகர செயலாளர் மற்றும் கவுன்சிலர் சேகர், நகராட்சி பொறியாளர் வசந்தன், பள்ளி தலைமை ஆசிரியை பாப்பாத்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.