சனிதோஷமா? பயப்படாதீர்கள், இதைச் செய்யுங்கள்
பொதுவாக கிரகங்களிலேயே நாம் அனைவரும் பயப்படும் கிரகம் சனி. அவர்தான் ஏழரைச் சனி, அஷ்டம சனி என்று பயமுறுத்துகிறார். ஆனால், ஏழரைச் சனியால் எத்தனையோ நன்மைகள் பலருடைய வாழ்க்கையில் நடைபெற்றிருக்கின்றன. திருமணம் ஆகிறது. வேலை கிடைக்கிறது. தொழில் வளர்ச்சி நடக்கிறது. இதெல்லாம்கூட ஏழரைச் சனியில் நடக்கிறது. எனவே, ஏழரைச் சனியோ, அஷ்டம சனியோ அது அவரவர் ஜாதகத்தில் சனியினுடைய அமைப்பினைப் பொறுத்துதான் இருக்கிறது.
தவிர, எல்லோரையுமே ஏழரைச் சனி பயமுறுத்துவதில்லை. இன்னொரு விஷயம். சனியை போன்ற நீதிமான் இல்லை என்பார்கள். ஒருவர், ஆரம்பத்தில் மிகுந்த அனுபவத்துடன், கஷ்டப்பட்டு, முன்னுக்கு வந்து நிறைய சம்பாதிக்கிறார் என்று சொன்னால், சனியின் பூரணமான ஆசி அவருக்கு இருக்கிறது. சனி தனது தசையில் படிப்பினையும், சொல்லித் தந்திருக்கிறார். பக்குவத்தையும் சொல்லித் தந்திருக்கிறார்.
அதன் மூலமாக, வாழ்க்கையில் வெற்றியையும் பெற வைத்திருக்கிறார் என்று பொருள். நீண்ட ஆயுளையும், குறைவில்லாத ஐஸ்வரியத்தையும் தரக் கூடியவர் சனி. ஜாதகத்தில் சனிபகவான் பலம் குறைந்து இருந்தாலும், ராகு, கேது போன்ற கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், ஆதிபத்திய விசேஷம் இல்லாமல் இருந்தாலும், அவர்கள் சனிக்கிழமை அன்று விரதம் இருக்க வேண்டும். மாலையில் பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். காகத்திற்கு எள் சாதம் வைப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். யாரையும் ஏமாற்றக்கூடாது. தவறான சிந்தனை கூடாது. சனி காயத்ரி மந்திரத்தைச் சொல்லலாம்.
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்’’
ஜாதக தோஷம் கண்டுபிடிப்பது எப்படி?
இப்பொழுது சிலர் ஒரு ஜாதகத்தை எடுத்துப் பார்த்த உடனே அதில் செவ்வாயோ ராகுவோ அமைந்த அமைப்பை வைத்துக் கொண்டு, ராகு தோஷம், செவ்வாய் தோஷம் என்று உடனடியாகச் சொல்லி விடுகிறார்கள். ஆனால், இப்படி தோஷங்களைச் சொல்வதற்கு முன்னால், பல நுணுக்கமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். லக்னத்தில் செவ்வாய் இருப்பதாலேயே அது செவ்வாய் தோஷம் என்று முடிவுக்கு வந்துவிட முடியாது. செவ்வாயின் பலத்தையும், அது அந்த பாவத்திற்குத் தோஷம் தரும் அமைப்பில் இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அதற்கு அடுத்து எந்த தோஷமாக இருந்தாலும், அது தருகின்ற கால அளவு என்று உண்டு.
சில தோஷங்கள் கர்ப்பத்திலேயே கழிந்து போய் இருக்கும். பூர்வ ஜென்ம, விட்ட குறை தொட்ட குறையாக அந்த கிரகம் அந்த ஸ்தானத்தில் வந்து நின்றிருக்கும், எனவே ‘‘எடுத்தேன் கவிழ்த்தேன்’’ என்று ஒரு தோஷத்தை கற்பித்துவிட முடியாது. நடைமுறை வாழ்க்கையில், அவருக்கு நிகழ்கின்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்து கொண்டு சொல்ல வேண்டும். வெறும் ஜாதகக் கட்ட கிரக அடைவுகளை வைத்துக் கொண்டு என்ன நடந்தது என்ன நடக்கிறது என்று சொல்வதெல்லாம் ஜோதிடத்தில் சாத்தியமில்லாத விஷயங்கள்.
திருமணத்திற்கு 10 பொருத்தங்கள் போதுமா?
பத்து பொருத்தங்கள் என்பது ஆரம்ப நிலையில், அந்த வரனை தேர்ந்தெடுக்கலாமா கூடாதா என்பதற்கு பயன்படுத்தலாம். அதாவது, முதல் சுற்று தேர்வுக்கு 10 பொருத்தங்களை நாம் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு இரண்டாம் கட்டமாக ஜாதக பொருத்தங்களைப் பார்க்க வேண்டும். மூன்றாவது கட்டமாக நடக்கக்கூடிய திசைகளையும் கோசாரத்தையும் பார்க்க வேண்டும். நான்காவது கட்டமாக, நேரடியாகக் கலந்து பேசி, விசாரித்து, பொறுமையுடன் தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வரனின் நடைமுறையில் ஜோதிட பலன்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்து முடிவு செய்ய வேண்டும். ஜாதக கட்டங்களைப் பார்க்கும் பொழுது லக்கனம், குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம், சப்தமஸ்தானம் எனப்படும் ஏழாம் இடம், மாங்கல்ய ஸ்தானம் அல்லது ஆயுள் ஸ்தானம் எனப்படும் எட்டாம் இடம், புத்ரஸ்தானம் அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடம், பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடம், சயன ஸ்தானம் என்று சொல்லப்படும் 12-ஆம் இடம் முதலிய இடங்களையும் பொருத்திப் பார்த்துதான் முடிவுக்கு வர வேண்டும்.
உதாரணமாக, ஐந்தாம் இடம் பலமாக இல்லாவிட்டால் அல்லது அங்கு ராகு-கேது போன்ற கிரகங்கள் இருந்தால், புத்ர பாக்கியம் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்ல முடியாது. ஐந்துக்கு ஐந்தாம் இடமான 9ம் பலம் பொருந்தி இருந்தால், ஐந்தாம் இடத்தின் தோஷங்கள் அடிபட்டுவிடும். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கட்டாயம் இருக்கும். இப்படி ஆராய்ந்துதான் முடிவு செய்ய வேண்டும்.
கிரகங்களும் மலர்களும்
சூரியனுக்கு செந்தாமரையும், சந்திரனுக்கு வெள்ளை அல்லிமலரும், செவ்வாய்க்கு செண்பகமலரும், புதனுக்கு வெண்காந்தள் மலரும், குருவுக்கு முல்லை மலரும், சுக்கிரனுக்கு வெண்தாமரை மலரும், சனிக்கு கருங்குவளை மலரும், ராகுவுக்கு மந்தாரை மலரும், கேதுவுக்கு செவ்வந்தி மலரும் ஏற்றது.
குருவுக்கு இந்த பரிகாரம்
நவகிரகங்களிலே பூரண சுபகிரகங்கள் என்று குருவையும், சுக்கிரனையும் சொல்லுவார்கள். இந்த இரண்டு கிரகங்களிலும் மிக அதிகமான சுபபலம் உடையவர் என்று குருவைச் சொல்லுவார்கள். ஒரு ஜாதகத்தில், குரு நீசம் பெற்றாலோ, ஆதிபத்தியம் இல்லாமல் இருந்தாலோ அல்லது 6, 8, 12 இடங்களில் மறைந்தாலோ அல்லது ராகு-கேது போன்ற கிரக சேர்க்கையோடு இருந்தாலோ அல்லது அவர்களுடைய நட்சத்திர சாரம் பெற்று இருந்தாலோ வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.
பணமுடை இருக்கும். படிப்பு ஏறாது. சுபத் தடைகள் இருக்கும். குழந்தை செல்வம் இருக்காது. இதற்கு பரிகாரமாக, வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குறிப்பாக, குருதசை – குருபுக்தி நடப்பவர்கள் இந்த விரதத்தை கடைப் பிடிக்க வேண்டும். கொண்டக்கடலையுடன் தயிர்சாதம் படைத்து, குரு காயத்ரி மந்திரத்தை மனம் உருக 24 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
குரு காயத்ரி:
`ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே
சுராசார்யாய தீமஹி
தந்நோ குரு ப்ரசோதயாத்’.
பொதுவாகவே, குருஸ்தானத்தில் இருப்பவர்களை கண்டு ஆசிர்வாதம் பெறவேண்டும். ராகவேந்திரர், ராமானுஜர், ஆதிசங்கரர் முதலிய குருஸ்தானத்தில் இருக்கிறவர்களை தியானிக்க வேண்டும். இதன் மூலமாக, குருவின் தோஷங்களைக் குறைக்கலாம்.
தொகுப்பு: பராசரன்