ஜாதகத்தில் விவாகரத்தை கண்டுபிடிக்க முடியுமா?

சென்ற இதழில் எந்தக் கிரகம் ஒருவருக்கு நன்மையைச் செய்யும் என்ற கேள்விக்கு, எல்லா கிரகமும் நன்மையைச் செய்யும். தீமையையும் செய்யும். அது அந்தந்த ஜாதக தசாபுத்தி அமைப்பைப் பொறுத்தது என்று சொல்லியிருந்தேன். சில சுபகிரகங்கள் தீமையைச் செய்யும் ஜாதக அமைப்பு இருந்தால், அசுபகிரகங்களைத்தாண்டி வலிமையுடன் தீமையைச் செய்யும். ஸ்ரீராமருடைய ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், கடக லக்கனம், கடக ராசி. சந்திரன் புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதம். குரு லக்னத்தில் உச்சம். இவைகள் எல்லாம் ஒருவருக்கு நல்ல கீர்த்தியையும், புகழையும், வீரத்தையும், அழகையும், ஐஸ்வரியத்தையும் தரும். குரு, சந்திரன் இணைந்து இருப்பதால், கஜகேசரி யோகம், குரு சந்திர யோகம் என்று பல யோகங்கள் ராமர் ஜாதகத்தில் இருக்கிறது.

குரு, லக்னத்தில் இருப்பதால், பத்திர யோகம் கிடைக்கிறது. அது மட்டும் இல்லை, திக்பலம் இருக்கிறது. ஆனால், ஒரு வேடிக்கை பாருங்கள். கடக லக்கின காரர்களுக்கு, குரு ஆறு ஒன்பதுக்கு உரியவர். பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால், எத்தனை எத்தனை நன்மைகளும் சிறப்புகளும் அடைந்தாரோ, அதைப் போலவே மிகப் பெரிய பகையையும் ராமர் அடைந்தார். காரணம், 6க்குரிய குரு லக்கினத்திலேயே உச்சமடைந்தார் என்பதுதான். கஜகேசரி யோகம் என்பது, பகையை வெல்லும் யோகம் அல்லவா! பகை இருந்தால்தானே வெல்ல முடியும். ஆறாம் இடத்து குரு லக்னத்திலேயே உச்சமடைந்து ராவணன் என்னும் உச்சபட்ச பகையைத் தந்தது. குரு என்பதால் ராவணன் அந்தணனாகவும், வேத வல்லுனனராகவும், சாம கானம் பாடி சிவனையே மயக்கியவனாகவும், வர பலம் மிகுந்த வனாகவும் கருதப்படுகின்றான். ஆனாலும் ஆறாம் அதிபதி அதிகபட்ச உச்சநிலையை அடைந்ததால், அவருடைய வரமும் பலமும் அவனுக்கு எதிராகவே மாறியது. இந்த ஆறாம் இடத்து தனுர் லக்னத்தை ராவணனுடைய லக்கினமாக வைத்துப் பார்த்தால், அவனுடைய எட்டாம் இடமாக ராமருடைய கடக லக்னம் அமையும். ஆறாம் இடத்து பகையை முடித்து வைத்தது எட்டாம் இடமான கடக லக்னம். அதாவது ராமர் என்பது விளங்கும்.

இப்பொழுது கடக லக்னத்திற்கு இரண்டு ஆதிபத்தியமும் வேலை செய்ததாகத் தானே பொருள் பாக்கியஸ்தானமும் வேலை செய்தது. அதனால், பெரும் புகழும், அற்புதமான தந்தையும், குலப் பெருமையும் கிடைத்தன. அதே குரு, ஆறாம் இடத்து வேலையையும் செய்ததால், ராவணன் என்கிற மிகப் பெரிய பகையையும் அடைந்தார். பகையை அடைந்து தானே வென்றார். அந்தப் பகையை அடைய வைத்தது அதே குருதானே.எனவே, ஒரு கிரகம் நல்லது செய்யுமா, கெட்டது செய்யுமா என்றால், இரண்டையும் செய்யும். அது அந்த ஜாதக விசேஷத்தைப் பொறுத்தது என்பதை மட்டும் மனதில் கொண்டால் போதும். இதை நடைமுறை வாழ்க்கையிலும் நாம் பார்க்கலாம். ஒரு ஜாதகத்தில் குடும்பஸ்தானம் கெட்டுப் போயிருந்து.

ஆறாமாதி ஏழிலிருந்து தசையை நடத்தினால். திருமணமும் நடக்கும், திருமண முறிவுக்கும் வாய்ப்புண்டு. ஆறு என்பது பிரிவு. 7 என்பது திருமணம். ஏழாம் இடத்திற்கு, 12-ஆம் இடம், ஆறாம் இடம் என்பதால் ஏழாம் இடத்துச் செயல்களை செய்த அதே கிரகமே பிரிவையும் தரும். காரணம், விதிப்படி அது அப்படித்தான் நடந்தாக வேண்டும். அது எந்த கிரகமாக வேண்டுமானாலும் இருக்கலாம். குருவாக இருக்கலாம், சுக்கிரனாக இருக்கலாம், சுக்கிரன் சுபகிரகம் என்பதால், அது ஏழாம் இடத்து பலனைச் செய்துவிட்டு. 6ம் இடத்து பலனைச் செய்யாமல் விட்டு விடாது. இரண்டு ஆதிபத்தியங்கள் இருந்தால், அது இரண்டையும் செய்யும். அதுவும் அடுத்தடுத்துச் செய்யும். சில திருமணங்கள் கோலாகலமாக நடந்து, ஒரு வாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கோர்ட் கேஸ் என்று நின்ற ஜாதகங்களையும் பார்த்து இருக்கிறோம். காரணம் கிரகங்கள் மனரீதியான சிக்கல்களை உண்டாக்கும். ஈகோ பிரச்னையை அதிகரிக்கும். இப்பொழுது ஒரு கேள்வி கேட்கலாம். இவர்களுக்கு திருமணமானால் உடனடியாக பிரிவு ஏற்படும் என்பதை ஜோதிடர் முன்கூட்டியே சொல்லக் கூடாதா? அல்லது இதற்கு மாற்று வழி ஏதும் இல்லையா? இதற்கு தோதான ஜாதகத்தைச் சேர்த்து, இப்படிப்பட்ட பிரிவு இல்லாமல் செய்துவிட முடியாதா? என்று கேட்கலாம்.

இதற்குப் பதில் ஒன்றுதான். விதி தன்னுடைய வேலையை தீர்க்கமாக ஆரம்பித்துவிட்டால், அது ஜோதிடர்கள் கண்களையும் கட்டிவிடும். கேரளாவில் மிகப் பெரிய ஜோதிடர் இருந்தார். அவர் திருமண பொருத்தத்தை பார்த்துக் கொடுப்பதில் மிகவும் கெட்டிக்காரர். அது ஒன்றை மட்டும்தான் அவர் பார்த்துக் கொடுப்பார். 100 ஜாதகங்கள் கொடுத்தாலும் சரியான ஜாதகங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கக்கூடிய ஆற்றல் அவரிடம் இருந்ததால், தினசரி அவரிடம் திருமணபொருத்தத்திற்காக வருவார்கள். அவர் ஓர் இரண்டு நிமிடங்களில் கணக்கு போட்டு சரியான ஜாதகத்தைத் தேர்ந்தெடுத்து கொடுப்பார். அப்படித்தான் ஒரு வாடிக்கையாளருக்கு கொடுத்தார். அவர்களும் மகிழ்ச்சியோடு சென்றுவிட்டார்கள். திருமணம் நடந்துவிட்டது. ஆனால் ஒரு மாதம் கழித்து ஜோதிடரை பார்க்க அவர் வீட்டு வாசலில் நின்றார். ஜோதிடர் அவரைப் பார்த்ததும் புரிந்து கொண்டார். ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று அவருடைய உள் மனது சொன்னது. தேர்ந்தெடுத்து கொடுத்த ஜாதகம் தவறாகிவிட்டது. 99 சதவீதம் சரியாகி ஒன்று தவறிவிட்டது. தன்னுடைய கண் கட்டப்பட்டுவிட்டது என்று உணர்ந்து கொண்டு, அந்த வாடிக்கையாளரிடம் சொன்னார்.

‘‘நீங்கள் எதற்காக வந்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிகிறது. இது தெய்வ சங்கல்பம். மனித முயற்சியை மீறிய சில செயல்களை நம்மால் தடுக்க முடியவில்லை. என்பதுதான் உண்மை. அது அப்படித்தான் நடந்தாக வேண்டும்’’ என்று வருத்தத்தோடு கூறினார்.திருமணம் நடந்து பிரிவு ஏற்பட வேண்டியது ஜாதகங்கள் ஏதோ ஒரு வகையில் காதல் திருமணமாகவோ, இல்லாவிட்டால் அவசரமாக ஜாதகப் பொருத்தம் பார்த்தோ, எப்படியோ சேர்ந்துவிடும். அதனால்தான் பலரும் திருமணம் முடிந்து விவாகரத்து ஆன பிறகு, மறுபடியும் ஜோதிடரிடம், ஏன் இப்படி திருமண விவாகரத்து ஆகிவிட்டது. மறுபடியும் திருமணம் நடக்குமா என்றெல்லாம் கேள்விகளைக் கேட்கிறார்கள். அதற்குப் பிறகு ஜோதிடர்கள் நிதானமாக ஆராய்ந்து ‘‘ஆம்; இந்த இரண்டு ஜாதகங்களுக்கும் பொருத்தம் இல்லை நீங்கள் இந்த தசாபுத்தியில் (பாதக தசை, அஷ்டம தசை) திருமணத்தை நடத்திவிட்டீர்கள். அதுதான் இப்படி ஆகிவிட்டது என்றெல்லாம் காரணத்தைச் சொல்வார்கள். நுட்பமாக கவனித்தால், இது ஒரு விபத்து. விபத்து நடக்கும் வரை அதற்கான எந்த அறிகுறிகளும் யாருக்கும் தெரியாது. விபத்து நடந்த பிறகுதான் வண்டி சரியில்லை, டிரைவர் சரி இல்லை, விளக்கு சரி இல்லை, எதிரே வந்தவன் சரியில்லை என்கின்ற காரணங்களைக் கண்டுபிடிக்க முடியும். என்னதான் கெட்டிக்கார ஜோதிடராக இருந்தாலும், ஒரு இருபது சதவீதம் வரை அவருடைய கணக்கீடுகள் மாறுவதற்கும், பலன் தவறுதற்கும் நிச்சயம் வாய்ப்பு இருக்கிறது. மனித முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு விதி மோசமாக வேலை செய்யும் ஜாதகத்தில், எந்த ஜோதிடராலும் பலன்களை துல்லியமாக கணிக்க முடியாது.

Related posts

மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்