Thursday, September 19, 2024
Home » ஜோதிடம் என்ற இயற்கை அறிவியல்

ஜோதிடம் என்ற இயற்கை அறிவியல்

by Nithya

நாம் கேயாஸ் தியரியை கேள்விப்பட்டிருப்போம். ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறிய சிறகடிப்பு வேறு ஒரு இடத்தில், ஒரு மிகப் பெரிய சூறாவளியை ஏற்படுத்தும் அல்லது பேரழிவை ஏற்படுத்தும். இதுதான் “கேயாஸ் தியரி” அல்லது “வண்ணத்துப்பூச்சி விளைவு” என்கிறோம்! இந்த கேயாஸ் தியரியின் விளைவைப் போல்தான் ஜோதிடம் உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு சிறுசிறு மாற்றமும் பெரிய மாற்றத்தின் ஆரம்பமே. அதனை தொடர்ந்து உற்று நோக்கினால் அதன் அடி ஆழம் புரியும். அறிவியலாளர்கள் ஜோதிடத்தை நம்புகிறார்களா? என்றால் நம்புகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம்! கேயாஸ் தியரியை நம்புகின்றவர்கள் ஜோதிடத்தையும் நம்புவார்கள். தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கும் காலத்திற்கு முன்பே ரிஷிகளும் முனிகளும், குரு – சிஷ்யப் பரம்பரையாக ஒவ்வொருவரும் வானியலைப் பற்றிய குறிப்புகளை ஓலைச்சுவடிகள் மூலமாகவும், கல்வெட்டுகள் மூலமாகவும் குறிப்பு எழுதி வைத்தனர்.

அந்த குறிப்புகளின்படி, நட்சத்திரங்கள் மற்றும் கோள்களின் இயக்கங்களை துல்லியமாக, கோள்களின் தன்மையையும் அந்த கோள்கள், சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நாட்களையும், துல்லியமாக கணக்கிட்டு குறிப்பு எழுதி வைத்துள்ளனர். அந்த குறிப்புகள்தான் இன்றும் பஞ்சாங்கம் புத்தகமாக தயாரிக்கப்படுகிறது.

நியூட்டனின் 3-ம் விதி

ஒவ்வொரு செயலும் (வினையும்) அதற்கு இணையான சமமான எதிரான பின்விளைவை (எதிர்வினையை) ஏற்படுத்தும் என்பதே நியூட்டனின் மூன்றாவது விதி ஆகும். ஒருவருடைய முன்னோர்களால் செய்யப்பட்ட பாவ புண்ணியங்கள், எதிர்வினையாக இந்த பிறவியில் தனது சந்ததிகளுக்கு தொடருவதே ஆகும். நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் எதிர்வினை உண்டு. நன்மையான செயல்களுக்கு நல்லவிளைவும் தீமையான செயல்களுக்கு தீயவிளைவும் உண்டு.

அறிவியல் நோக்கில் பரிகாரம் என்பது என்ன? ஏன்?

நவகோள்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஆற்றலை கொண்டுள்ளன. அந்த ஒவ்வொரு ஆற்றலும் மனிதனுக்கும் தேவை. அண்டம் என்ற பிரபஞ்சத்திற்கும் இதே ஆற்றல் தேவை. இதைதான் அண்டத்தில் உள்ளது, பிண்டத்திலும் உள்ளது என்றார்கள் பெரியோர்கள். பரிகாரம் என்பது கிரகங்களுக்கு இணையான செயலை செய்வதே பரிகாரம் என்பதாகும். இணையான செயலை செய்து, ஒரு செயலை ஏற்படுத்துவதே பரிகாரம் ஆகும். வண்ணங்கள், பஞ்சபூதங்கள், கோயில்கள், தானியங்கள், கிழமைகள், இரவு, பகல், இடம், உயிர்கள் மற்றும் உறவுகள் ஆகிய அனைத்தும் கிரகங்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. இவைகளுடன் நாம் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்துடன் தொடர்பு கொள்ளும்போது, நமது வாழ்வில் மாற்றத்தை உருவாக்கும்.

கிரகணம் சொல்லும் அறிவியல்

பழங்காலத்தில் சூரியனை பாம்பு விழுங்க போகிறது எனச் சொல்வார்கள். அவ்வாறு சொன்னவர்களை பலர் கேலி செய்ததும் உண்டு. ஜோதிடத்தில் சூரியன், சந்திரன் கிரகங்கள் மேல் ராகு, கேது பயணிப்பதினால் ஏற்படுவதே கிரகணம். அறிவியல் கண்டுபிடிப்புகள் இல்லாத காலத்தில், பஞ்சாங்கம் மூலமாக கிரகணம் வரும் நாட்களை சரியாக குறிப்பிட்டு கர்ப்பிணிகள், நோயுற்றவர்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்துவார்கள். கிரகண சமயத்தில் சூரியன், சந்திரன் வெளிப்படுத்தும் கதிர்கள் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபியல் தொடர்பான பாதிப்புகளும், நோயுற்றவர்களுக்கு நோயின் தீவிரம் அதிகமாகும் என்பதால் இதனை அறிவுறுத்துவார்கள். அந்த காலக்கட்டத்தில், கிரகணத்தின் முடிவுறும் நேரத்தை அறிவதற்கு, தட்டின் மீது உலக்கையை வைத்துவிடுவார்கள். அது அப்படியே எந்த ஒரு துணையின்றி நிற்கும். அப்படி வைக்கும் பட்சத்தில், அந்த உலக்கை விழும் நேரம், கிரகணம் முடியும் நேரமாக குறிப்பிட்டார்கள். இப்படி விஞ்ஞானம் இல்லாத காலத்திலும், ஜோதிடம் நமக்கு
உதவியிருக்கிறது.

ஜோதிடத்தில் ஏன் சந்திரனை மையப்படுத்தி நிகழ்வுகள் நகர்த்தப்படுகிறது?

பூமியின் துணைக்கோள் சந்திரன். சூரியனின் ஒளியை பெற்று, பூமியின் மீது பிரதிபலிக்கும் தன்மையுடையது. மேலும், பூமியில் தோன்றும் உயிர்கள் அனைத்தும் தாய் (சந்திரன்) மூலம் வெளிவருவதால் பல ஆய்வுகளின் வெளிப்பாடாக சந்திரன் இருக்கிறது. மனம், உடல், தாய் என்ற அனைத்தையும் சந்திரனை மையப்படுத்தி சொல்லப்படுகிறது. சந்திரனுக்கும் உயிர் பிரசவிக்கும் பெரிய தொடர், பேரண்டத்தில் உள்ளது என்பது அனுபவ உண்மை.

நோய்களும் அதன் அறிவியலும்

ஜோதிடத்தின் அடிப்படையில் பௌர்ணமி, அமாவாசை அன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் மிகவும் கடினமான பாதிப்புக்கு உள்ளாவார்கள். சந்திரனுக்கு ஆங்கிலத்தில் LUNAR என்று பெயர். மனநிலை சரியில்லாத, அல்லது பிரச்னைகளுக்கு ஆளானவர்களை, ஆங்கிலத்தில் Lunatic trouble என்பார்கள். எனவே, சந்திரனுக்கும் மனதுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகிறது. சந்திரனை ஜோதிடம் மனோகாரகன் என்கிறது. அன்று கடலில் அலை அதிகமாக இருக்கும். மேலும், ஈர்ப்புவிசை அதிகமாக இருப்பதனால், மனம் பாதிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்பொழுது நோயுற்றவர்களுக்கு மேலும் நோய் அதிகரிக்கிறது.

“பொன்னுக்கு வீங்கி’’ என்ற நோய் உள்ளது. இது அம்மைக்கட்டு நோய், கூகைக்கட்டு, என பல பெயர்களில் கூறப்படுகிறது. பொன்னுக்கு வீங்கி, மம்ப்ஸ் வைரசினால் ஏற்படும் ஒருவகை நோய் ஆகும். அறிவியல் நூல்களில் இது `மம்ப்ஸ்’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நோய் வியாழன் கிரக சக்தியின் குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் தங்கத்தால் ஆன பொன் பொருளை கழுத்தில் அனுவித்தால், இந்த நோய் விலகும் என்பது பழமையான வைத்தியம். குரு தங்கத்திற்கு உரிய கிரகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. காக்கா வலிப்பு என்ற நோய் ஏற்படுவதை நாம் அறிந்திருக்கிறோம். மனதில் ஏற்படுகின்ற அதிக அழுத்தத்தின் காரணமாக, மூளையில் ஏற்படுகின்ற அதிக ஆற்றல் நரம்புகளின் வழியாக செல்லும்போது ஏற்படும், கை கால்களில் ஒரு விதமான உதறல் ஏற்படுகின்றது. அப்போது ஏதேனும் இரும்பு போன்ற பொருட்களை கொடுத்தவுடன் அடங்குகிறது. இது இரும்புச் சத்து குறைப்பாட்டால் (சனி) ஏற்படுகின்றது. எனவே, சனி என்ற கிரகத்தின் ஆற்றல் குறைபாட்டால் இந்த நோய் உண்டாவதை அறியலாம்.

ஜோதிடத்தை பற்றிய கூற்றுகள்

சூரியன் கோள் இல்லை. எப்படி ஜோதிடத்தில் சுழல்வதாக சொல்கிறார்கள் என கேட்கிறார்கள்? அதாவது, சூரியன் நகர்வதில்லை. ஆனால், சூரியன் நகர்வது போன்ற தோற்றம் பூமியிலிருந்து, சூரியனை காணும் போது தோன்றுகிறது. எனவே, சூரியனை நகர்வதாக காண்பிக்கப்படுகிறது. அப்பொழுதுதான் இயக்கம் நிகழ்கிறது. அந்த இயக்கம்தான் ஒளியிலும் மாற்றத்ைத தருகிறது, அதுவே பிரபஞ்சம் முழுவதும் மாற்றமாக பரிணமிக்கிறது.

நிழல் கிரகங்கள் எப்படி சூழல்கின்றன?

ராகு – கேதுகள் நிழல் கிரகங்கள் (Shadow planets), அவை எப்படி நகரும் தன்மையில் இருக்கிறது? சூரியனின் ஒளியின் நிழலாக ராகுவும், சந்திரனின் ஒளியின் நிழலாக கேதுவும் இருக்கிறது. இரண்டு ஒளி கோள்களும் நகர்வதால் நிழல்களும் நகர்கின்றன. மனிதர்களின் நன்மைக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் ஜோதிட அறிவியலை கையாள்வது முன்னேற்றத்தை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும். ஜோதிடத்தை அறிவியலாகவும், அறிவியலை ஜோதிடமாகவும் உளமாற உணர்தலே ஜோதிடத்தை விளங்கிக் கொள்ள இயலும். ஜோதிடத்தை உணர்வு தளத்தில் இருந்து விலக்கி அஃறிணையாக பார்த்தால், ஜோதிடம் என்பதை விளங்கிக் கொள்ள இயலாது.

You may also like

Leave a Comment

9 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi