திருமலை: ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ம் ஆண்டு பதவியில் இருந்தபோது அவரது மகன் ஜெகன் மோகன் தந்தையின் முதல்வர் பதவியை தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்கள் சேர்த்ததாகவும், இருவரும் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் சிபிஐ விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர். பின்னர், சிலமாத சிறை தண்டனைக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த ஜெகன்மோகன் மாநிலம் பிரிந்த பின்னர் 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல்வர் ஆனார். இதனால் ஜெகன் மோகன் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜாராக முடியவில்லை என கூறியதால் இந்த வழக்கு விசாரணை செய்த உயர் நீதிமன்றம் தற்போதைய முதல்வர் ஜெகன் மோகனுக்கு ஜாமீன் மற்றும் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், குற்றம் சாட்டப்பட்டவர் ஆந்திராவின் முதல்வராக இருப்பதால் இந்த வழக்கில் பல்வேறு தலையீடுகள் இருப்பதாகவும், ரூ.40 ஆயிரம் கோடி வரை சொத்துகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு வழக்கு தாமதம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.