திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் பேசியதை புத்தகமாக அச்சடித்து வீடு வீடாக விநியோகம் செய்வது தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் கொடுத்துள்ளது. ஆற்றிங்கல் தொகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டசபையில் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாக விநியோகித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஆற்றிங்கல் தொகுதி காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கமிட்டித் தலைவரான கிருஷ்ணபிள்ளை தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பது: சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களை ஆற்றிங்கல் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் விநியோகம் செய்து வருகின்றனர். இது தேர்தல் நடைமுறை சட்டத்திற்கு எதிரானதாகும். புத்தகங்களை அச்சடிப்பதற்கு பல கோடி பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.