தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால், இப்போது பேசுகிற உறுப்பினர்கள் அந்த நிகழ்வு குறித்து பேசுவார்களோ என்று பயந்துதான் இவர்கள் இன்றைக்கு திட்டமிட்டு ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, விதிகளுக்குப் புறம்பாக நடந்துகொண்டு, மரபுகளுக்கு மாறாக குழப்பம் விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ஜனநாயக முறையில் இந்த மாமன்றம் நடைபெறவேண்டும் என்பதில், கலைஞரும், நானும் அசையாத கொள்கை உறுதி கொண்டவர்கள். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திலே பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். தாங்களும் (சபாநாயகர் அப்பாவு) பல கோரிக்கைகள் வைத்து, பேரவை முன்னவரும் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என்று பரிந்துரை செய்தும் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் இங்கே நடந்துகொண்ட முறை தவிர்த்திருக்கப்பட வேண்டியதுதான்.
பேரவை விதி 120ன் கீழ் பேரவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். அதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. எனினும், என்னுடைய வேண்டுகோளாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு காலையிலும், மாலையிலும் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், வெளியேற்றப்பட்டவர்கள் இந்த அவைக்கு வினாக்கள் விடைகள் நேரம் முடிந்த பின்னரே அனுமதிக்கப் பெறலாம் என்னும் வேண்டுகோளையும், பிரதான எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்ய வாய்ப்பு தர வேண்டும் என்றும், இதனை தாங்கள் பரிசீலித்து ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டு அமைகிறேன் என்றார். இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசலாம் என்று அழைக்கிறேன் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.