அவனியாபுரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மதுரை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் தேர்வு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் இயற்றி டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். தமிழகம் போலவே மற்ற மாநிலங்களிலும் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என, உறுதியாக இருக்கிறார்கள். மோடிக்கு ஜனநாயக உணர்வு இருந்தால் அதை செய்வார் என்று நினைக்கிறேன். அதிமுகவை பொறுத்தவரை, சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதியுங்கள் என்று சபாநாயகர் கூறினார். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை.
விவாதிக்க அக்கறை இல்லாததால் சட்டசபையில் நாடகமாடுகிறார்கள். இதன் மூலம் திமுகவை அசைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தாலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும். இவ்வாறு கூறினார்.