சென்னை: சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் பிற மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகளை கேட்டுள்ளோம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என லோக் சத்தா கட்சி, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அதிமுக பொருளாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கானது, ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா பூர்வாலா மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, மற்ற மாநிலங்களில் சட்டசபை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக எந்தவிதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது என்ற தகவலை சேகரித்து வருவதாகவும், 7 மாநிலங்கள் இதுவரை தகவல்கள் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீதமுள்ள மாநிலங்களில் இருந்து விளக்கங்களை பெற்ற பிறகு இந்த நேரடி ஒளிபரப்பு செய்யும் விவகாரத்தில் கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்தார். இந்த விளக்கத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்; இந்த வழக்கை ஏப்ரல் 16ம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.