கவுகாத்தி: அசாமின் லகிம்பூர் தொகுதி வேட்பாளராக உதய் சங்கர் ஹசாரிகாவை காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்தது. ஹசாரிகா கடந்த சில மாதத்திற்கு முன் பாஜவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தவர். அம்மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் குமார் போராவின் வலுவான ஆதரவை பெற்றுள்ள ஹசாரிகா, லகிம்பூர் தொகுதியில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற முயற்சிக்கும் பாஜ வேட்பாளர் பிரதான் பராவுக்கு கடும் போட்டியாக இருப்பார் என கட்சி மேலிடம் கருதி அவரை களமிறங்கி உள்ளது.
இந்த முடிவால், லகிம்பூரில் இருந்து 3 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட தனது மனைவி ராணீ நாராவுக்கு இம்முறை சீட் தரப்படும் என எதிர்பார்த்த காங்கிரஸ் எம்எல்ஏ பாரத் சந்திர நாரா ஏமாற்றமடைந்தார். இந்நிலையில், மனைவிக்கு சீட் மறுக்கப்பட்டதால் அவர் காங்கிரசில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.இது தொடர்பாக கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.