கவுகாத்தி: பகவத் கீதை மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட பிழை காரணமாக பிரச்னை ஏற்பட்டதாக சாதிவெறி பதிவுக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மன்னிப்பு கோரியுள்ளார். அசாம் மாநிலத்தில் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. ஹிமந்த பிஸ்வா நாள்தோறும் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட தன் சமூக வலைதளங்களில் பகவத் கீதையின் ஒரு ஸ்லோகத்தையும், அதன் மொழிபெயர்ப்பையும் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதன்படி கடந்த 26ம் தேதி ஹிமந்தா பதிவிட்ட பகவத் கீதையின் மொழிபெயர்ப்பில், பிராமணர்களுக்கு சேவை செய்வதே சூத்திரர்களின் கடமை என்று பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில் அந்த பதிவை ஹிமந்தா நீக்கி விட்டார். இருந்தபோதும் அதுதொடர்பான சர்ச்சை இன்னும் அடங்கவில்லை.
இந்நிலையில் தனது பதிவுக்கு ஹிமந்த பிஸ்வ சர்மா மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பதிவில், “எனது குழு உறுப்பினர் ஒருவரின் தவறான மொழிபெயர்ப்பால் அந்த தவறு ஏற்பட்டது. அந்த பதிவை கண்டவுடன் நான் நீக்கி விட்டேன். அந்த பதிவால் யாருடைய மனதும் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். அசாம் மாநிலம் சாதியற்ற சமுதாயத்துக்கு சரியான உதாரணமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.