சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் கணக்கெடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு, கையெழுத்து பேரணி சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிமைகள் திட்டத்தை செயல்படுத்தி தமிழகத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் பொருட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவுகள் 2023 கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு பணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தெருமுனை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகத்தரவுகள் கணக்கெடுப்பு 2023 கையெழுத்து பேரணி நடைபெறுகிறது. இந்த நிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கையெழுத்து பேரணியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் கமல் கிஷோர், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தாத் ஜகடே ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.