சேலம்: ஆசிய விளையாட்டுப் போட்டி, சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் சேலத்தில் இருந்து போல்வால்ட் போட்டியில் பவித்ரா (21) என்ற வீராங்கனை பங்கேற்கிறார். இவர் சேலம் நகரமலை அடிவாரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது மகள். சேலம் காந்தி ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்ற இவர், போல்வால்ட் பிரிவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இதற்காக ஒன்றிய அரசு, சேலம் ரயில்வே கோட்டத்தில் அவருக்கு டிக்கெட் பரிசோதகர் பணி வழங்கியது.
தற்போது நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதி போட்டி புவனேஷ்வரில் நடந்தது. இதில் பவித்ரா, 4.10 மீட்டர் உயரத்தை தாண்டினார். இதையடுத்து ஆசிய போட்டியில் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டார். இன்று சென்னையில் இருந்து சீனா புறப்பட்டு செல்கிறார். வருகிற 29ம்தேதி தடகள போட்டி துவங்குகிறது. போல்வால்ட் போட்டி 2ம்தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதுகுறித்து பவித்ராவின் பயிற்சியாளர் இளம்பரிதி கூறுகையில், ‘இந்தியாவின் சார்பில் போல்வால்ட் போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே வீராங்கனையாக பவித்ரா இருக்கிறார். இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு புகழ் சேர்ப்பார்’ என்றார்.