ஆரணி: ஆரணியில் மரக்கழிவுகளில் இருந்து கைவினை பொருட்கள் தயாரித்தல் குறித்து கிராமப்புற மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் பலவகையான கைவினை பொருட்களை செய்து அசத்தினர். ஆரணியில் கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில் மரக்கழிவுகளில் இருந்து கைவினைப் பொருட்கள் செய்வது குறித்து ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கைவினை கலைஞர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சியை கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய உதவி இயக்குநர்கள் சித்ராமதன், நாகப்பா ஆகியோர் கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கி வைத்தனர்.
பயிற்சிப் பெற்ற கைவினை கலைஞர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.இப்பயிற்சியில், மரக்கழிவுகளில் இருந்து மகாத்மா காந்தியின் உருவ படம், மாட்டு வண்டி, தேர், கொக்கு, மீன், சீப்பு, பென்சில், முகம் பார்க்கும் கண்ணாடி, வீட்டு உபயோக பொருட்கள், இசைக்கருவிகள் என பல்வேறு பொருட்கள் கலைநுட்பத்துடன் உற்பத்தி செய்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், பயிற்சி பெற்ற கைவினை கலைஞர்களுக்கு கைவினை உபகரணங்கள் மற்றும் சான்றுகளை மாநில கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய இயக்குநர் சுரேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் சர்வோதய சங்கத்தினர், அகில இந்திய விஸ்வகர்மா பேரவை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.