Saturday, June 29, 2024
Home » ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.4800 கோடி மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் 7 மணி நேரம் விசாரணை: பாஜ நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள்

ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.4800 கோடி மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் 7 மணி நேரம் விசாரணை: பாஜ நிர்வாகிகளுக்கு பணம் கொடுத்தது குறித்து அடுக்கடுக்கான கேள்விகள்

by Dhanush Kumar

சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.4800 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர்களுக்கு உள்ள தொடர்பு குறித்து அவரிடம் துருவி துருவி கேள்விகளை கேட்டனர். பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டவர், காட்டிக் கொடுக்க மறுப்பதால் மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை அமைந்தகரை மற்றும் கோவை, திருவண்ணாமலை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அலுவலகம் அமைத்து பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான விளம்பரம் கொடுத்து பணம் வசூலித்து வந்தனர். அதில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் அவர்களுக்கு மாதம் ரூ.36 ஆயிரம் 10 மாதத்தில் ரூ.3.60 லட்சம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான திட்டமாக அறிவித்தனர். இதனால் இந்த நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர். அதில் பெரும்பாலானவர்கள் நடுத்தர மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என்று தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து, இந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் குடும்பத்துடன் சவுதி அரேபியா தப்பிச் சென்றார். இந்த வழக்கில் இந்த நிறுவன இயக்குநர் ஹரீஸ், மாலதி, பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அதில் ஹரீஸ், பாஜ நிர்வாகி. இவர், பாஜ மாநில நிர்வாகிகளுக்கு பெருமளவில் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதனால் இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களை காட்டிக் கொடுக்க ஹரீஸ் மறுத்து விட்டார். இந்தநிலையில் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை காஞ்சிபுரத்தில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் வழக்கில் இருந்து தப்பிக்க ரூ.20 கோடியை நடிகர் ஆர்.கே.சுரேஷிடம் வழங்கியதாக தெரிவித்தார். அவர் அந்தப் பணத்தில் வடபழனியில் உள்ள சினிமா புரோக்கர் ஒருவருக்கு ரூ.7 கோடியை ெகாடுத்துள்ளார். பின்னர் 13 கோடியை வைத்து பல அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் இந்த வழக்கில் அவர் எனக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நான் பணத்தை செக்காகத்தான் கொடுத்தேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்.கே.சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரை கைது செய்ய திட்டமிட்டிருந்தனர். இதனால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து, அவரது பாஸ்போர்ட்டை முடக்கினர். பின்னர், அவருக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் ஆஜராகாததால், அவரை கைது செய்யும்படி சர்வதேச போலீசிடம் பொருளாதரக் குற்றப்பிரிவு போலீசார் கேட்டுக் கொண்டனர். இந்தநிலையில் அவருக்கு இடையக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இரு நாட்களுக்கு முன்னர் அவர் சென்னை திரும்பினார். நேற்று காலையில் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் எஸ்பி வேல்முருகன் முன்பு ஆஜரானார். அவரிடம் போலீசார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். ரூ.20 கோடியை யாருக்கெல்லாம் கொடுத்தார். அந்தப் பணம் எங்கு உள்ளது, பாஜக நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டதா, மாநில நிர்வாகிக்கு எவ்வளவு வழங்கப்பட்டது போன்றவை குறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். பணத்தை வாங்கியதை ஒப்புக் கொண்ட சுரேஷ், அந்தப் பணத்தை யாருக்கு கொடுத்தார் என்ற விபரத்தை கூற மறுத்து வருகிறார். இதனால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

3 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi