கலைஞரின் கருத்தியல் தெளிவும், மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது: மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி புகழாரம்

சென்னை: கலைஞரின் கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில், தமிழ்நாட்டு மக்களுக்கு அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது வியத்தகு வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நினைவு நாணயம் வெளியிடப்படுவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

கலைஞரின் சமூகரீதியான முற்போக்குப் பார்வையும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அசைக்கமுடியாத அர்ப்பணிப்பும் கோடிக்கணக்கான மக்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ வழி வகுத்தது. அவரது உறுதியான தலைமையின் கீழ், தமிழ்நாடு ஒரு திடமான லட்சியப் பாதையில் சென்றுள்ளது. அவரது கருத்தியல் தெளிவும் மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் தன்னை முன்னோடி மாநிலமாக நிலைநிறுத்திக் கொள்ள உதவியது. பல மாநிலங்கள் பெரிய கனவுகள் காண ஊக்கமளித்துள்ளன.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பாராட்டுகிறேன். அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இந்தியாவைப் பாதுகாப்பதில் அவரது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

* சகோதரர் ராகுல் காந்திக்கு நன்றி’

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தியின் வாழ்த்துச் செய்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவு நாணய வெளியீட்டு விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, வாழ்த்துகளைத் தெரிவித்த சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றி! தலைவர் கலைஞரின் கனவுகளை நிறைவேற்றத் தொடர்ந்து ஒன்றிணைந்து பாடுபடுவோம்!. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு