Tuesday, August 6, 2024
Home » கலைஞர் பற்றி அவதூறு பாடல் பாடியவர்களின் மனோநிலை சாதாரண மனிதர்களின் தொனியல்ல அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே: கிருஷ்ணசாமி கண்டனம்

கலைஞர் பற்றி அவதூறு பாடல் பாடியவர்களின் மனோநிலை சாதாரண மனிதர்களின் தொனியல்ல அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே: கிருஷ்ணசாமி கண்டனம்

by Ranjith

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை: கலைஞர் காலமாகி ஆறேழு வருடங்கள் ஆகிவிட்டன.தனது 44வது வயதில் 1969ம் ஆண்டில் அவர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆக தமிழகத்தில் முதன்முறையாகப் பதவி ஏற்றவர். அதற்குப் பிறகு, ஐந்து முறை முதலமைச்சர் பதவியிலிருந்திருக்கிறார். தேர்தலாக இருந்தாலும், அரசியல் பிரச்சனைகளாக இருந்தாலும், மக்களுடைய பிரச்சனைகளாக இருந்தாலும் எண்ணிய சில மணி நேரங்களிலேயே அல்லது ஓரிரு நாட்களிலேயே அது குறித்து அவரிடம் சென்று பேசுவதற்கு உண்டான ஆளுமை அவரிடத்திலே இருந்தது.

அதனால் தான் ஜாதி, வெறியும் மத வெறியும் இனவெறியும் ஒவ்வொருவரது அணுவிலேயும் ஊறிப் போய் இருக்கக்கூடிய தமிழகத்தில் ஐந்து முறை தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலிலிருந்திருக்கிறார். 60 ஆண்டு காலம் அரசியலில் நிலைத்திருந்திருக்கிறார். அவருடைய தவறான அரசியல் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு எத்தனையோ தளங்கள் உண்டு எத்தனையோ காரணிகள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, அவர் மறைந்த ஆறேழு வருடங்களுக்குப் பிறகும், எப்பொழுதோ யாராலோ எதற்காகவோ புனையப்பட்ட அவதூறுப் பாடலை சம்பந்தமில்லாமல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அவரைக் கொச்சைப்படுத்திட வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பாடி காண்பிப்பதும், அதற்காக ஒருவர் மீது சட்ட நடவடிக்கைகள் பாயும் பொழுது.

அதை நாகரீகமாக, சட்டப் பூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக அதே வார்த்தையைத் திரும்பச் சொல்லி, முடிந்தால் நடவடிக்கை எடுத்துப் பார் என்று சொல்வதெல்லாம் அரசியலாகத் தெரியவில்லை. சாதிய ஆணவத்தின் இன்னொரு வடிவமாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. பாடிக் காட்டியவர்களின் மனோநிலை, அந்த பாடல் வரிகளின் பொருள், பாடியவர்களின் தொனி, அதை ஆதரித்தவர்களின் தொனி என அனைத்தும் சாதாரண மனிதர்களின் தொனியாக தெரியவில்லை. அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடாகத் தெரிகிறது. கண்டிக்க மனமுடையோர் கண்டிக்கலாம், கடந்து செல்லக் கூடியவர்கள் கடந்து செல்லலாம். ஆனால், நியாயப்படுத்த மட்டும் முயல்வது, நியாயமாகாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

5 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi