Sunday, September 8, 2024
Home » செயற்கை இடுபொருட்கள் புகுந்த பிறகே சிக்கல் வந்தது!

செயற்கை இடுபொருட்கள் புகுந்த பிறகே சிக்கல் வந்தது!

by Porselvi

மரபு விதைகள், பாரம்பரிய விதைகள் போன்ற வார்த்தைகள் இப்போது அதிகளவில் புழக்கத்தில் வந்திருக்கின்றன. ரசாயன விவசாயம், அதன் விளைவாக உருவான நோய்ப் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்புணர்வு இது. இன்று பலர் மனமுவந்து இயற்கை விவசாயம் செய்ய முன்வந்திருக்கிறார்கள். மேலும் விவசாயத்தில் நமது மரபைத்தேடும் பயணத்திலும் முகமலர்ச்சியோடு இறங்கி இருக்கிறார்கள். இதன் விளைவாக தமிழகத்தின் பல பகுதிகளில் விதைத்திருவிழா, வேளாண் கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. வேலூரில் வெங்கடேஸ்வரா நிதியுதவி பள்ளி வளாகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா இந்தப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக மாறியிருக்கிறது.

மரபு விதைகளால் நிறைந்திருந்த இந்தக் கண்காட்சி அரங்கம், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது. கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் சேகரித்தும், பயிர் செய்தும் வந்த மரபு விதைகளைக் கொண்டுவந்து காட்சிப்படுத்தினர். தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சியில் மண்புழு ஆராய்ச்சியாளர் இஸ்மாயில், சூழலியலாளர் பாமயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் மண்புழு ஆராய்ச்சியாளர் இஸ்மாயில் பேசுகையில், ‘மண்ணில் இயற்கையாகவே படைக்கப்பட்டுள்ள மண்புழுக்களும், நன்மை தரும் பாக்டீரியாக்களும், நுண்ணுயிரிகளும் வேளாண் உற்பத்திக்கு துணை புரிந்தன. செயற்கை உரங்களால் நமது மண்ணில் இருந்த நுண்ணுயிரிகளும், மண்புழுக்களையும் காணமுடியவில்லை. இன்றுதான் நாம் அதை உணர்ந்திருக்கிறோம். இயற்கையை விட்டு விலகினால், அது ஆபத்தைத்தான் தரும்’ எச்சரிக்கை மணி அடித்தார்.

சூழலியலாளர் பாமயன் பேசிய பேச்சு மரபு விதை, இன்றைய சூழலியல் குறித்து இளைய தலைமுறைக்கு பல தகவல்களைத் தரும் வகையில் இருந்தது. “ இந்தப் பணியை இங்குள்ள இளைஞர்கள் செய்வது பெருமைக்குரியது. இன்றைய சூழலில் பலர், விதைகளை ஒரு இடுபொருளாகவே பார்க்கிறார்கள். சூழலியல் ஆய்வாளர்கள் இது ஒரு வளம் என்கிறார்கள். விதை என்பது ஒரு ஆதாரம். அதை நமது உயிர்த்துளி என்றும் சொல்லலாம். விதைகள் என்பது இல்லாமல் போனால் உலகமே நின்றுவிடும். இந்த ஆழமான புரிதல் இல்லை என்றால் சிரமம்தான். விதைகளில் மூன்று வகைகள் உள்ளன. முதலில் மரபு அல்லது பாரம்பரிய விதைகள், 2வது கலப்பின விதைகள். இது பல ரகங்களைச் சேர்த்து உருவாக்கப்படுகிறது. இதற்கு முளைப்புத்திறன் உண்டு. அடுத்தது மரபணு மாற்றப்பட்ட விதைகள். இதுதான் பேராபத்தைத் தருவது. உதாரணத்துக்கு பி.டி. பருத்தி விதை என்று கேள்விப்பட்டிருப்போம். இந்த விதை முற்றிலும் பாரம்பரிய பருத்தி விதை ரகங்களை அழித்துவிட்டது. முன்பெல்லாம் பருத்திப்பால் அருந்துவோம். மாட்டுக்கு பருத்திப் புண்ணாக்கு போடுவோம். இன்று அதை நம்பி குடிக்க முடியாது. தவிர இது முழுமையாக வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து இறக்குமதியாகிறது. அந்த விதையில் உணவுத்தன்மை இல்லை.

உணவில் தற்சார்பு அடைந்து விட்டோம் என்கிறார்கள். அது தவறு. கோதுமை, எண்ணெய், பருப்பு என பல உணவு வகைகள் வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதியாகிறது. அவை எந்த வகை விதையில் இருந்து உற்பத்தியாகிறது என்பது சந்தேகம்தான். மரபணு மாற்றப்பட்ட பருத்திக்கு எதிர்ப்பு கிளம்பியபோது, அது உணவு கிடையாது, பருத்தி நூல் உற்பத்திக்குதான் என்றார்கள். இதுதான் அறிவியல் ஆய்வாளர்களுக்கும், நமக்கும் உள்ள பிரச்னை. யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்று பிறர் தர வாரா’ என்று சங்க இலக்கிய பாடல் உண்டு. கடலில் அணுக்கழிவுகள் கொட்டப்படும்போது அதில் உள்ள கதிர்வீச்சு, மீன்களை பாதிக்கும். அந்த மீன்கள் உலகம் முழுக்க பயணிக்கலாம். அல்லது அந்த மீன் மூலம் மற்ற மீன்களும் கதிர்வீச்சுக்கு ஆளாகும். அதேபோல்தான் பாரம்பரியத்தை நாம் தொலைத்தால் நமக்கு தீமைதான் வரும். இயற்கை என்பது இயல்பாகவே அதன் வேலையைச் செய்யும். அது மாறினால் நம்மால் வாழ முடியாது, இருக்க முடியாது. அதுபோல்தான் விதைகளும். உதாரணத்துக்கு பூசணி. இது அந்த சீசனில் தானாக முளைக்கும். வளரும். விதையைத் தரும். இயற்கை என்பது நமது பேராசான். மலைகளில் பொழியும் மழைநீர் ஒன்று சேர்ந்து ஆறாக உருவெடுத்து, தானே பாதை அமைத்து ஓடுகிறது. இப்படி இயற்கை என்பது மிகப்பெரிய வடிவமைப்பாளர்.

அது என்றைக்கும் தனது ஆற்றலை வீணாக்காது. இயற்கை உரம் என்பது இலை, தழை போன்ற தாவரக் கழிவுகள் 30 சதவீதமும், விலங்குகளின் கழிவுகள் 70 சதவீதமும் கலந்ததுதான். இதை இயற்கையே அந்தந்த சீசனில் செய்து விடுகிறது. வேளாண்மையில் இயற்கையை விட்டு செயற்கை வந்த பிறகு சிக்கல் உருவாகும். உதாரணத்துக்கு யூரியா உரம். இதை தழைச்சத்து என்பார்கள். இதை செயற்கையாக உருவான நைட்ரஜனைக் கொண்டு அழுத்தம் கொடுத்து உருவாக்கும்போது ரசாயன உரமாகிறது. இதனை இயற்கையே செய்து விடும். வளர்ச்சி என்பதை பொருளாதார வளர்ச்சி என்று மேலைநாடுகள் சொல்கின்றன. காடுகளை அழித்து கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. கடலின் ஒரு பகுதியை அழித்து பெரிய துறைமுகங்கள் கட்டப்படுகின்றன. அதேபோல் பெட்ரோல், நிலக்கரி என்று பலவற்றையும் இயற்கையை அழித்து எடுக்கிறார்கள். ஒரு கட்டத்துக்கு மேல் அது முற்றுப்பெறும். அது வளர்ச்சியல்ல. இதைத் தவிர்த்த நீடித்த, நிலையான வளர்ச்சியைப் பற்றித்தான் நாம் பேசுகிறோம். அதற்கு இயற்கையை காப்பது முக்கியம். கொரோனா வந்து உலகையே திகைக்க வைத்தது. ஆகவே நாம் மனிதர்கள். பேராற்றல் மிகுந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையுடனான நமது உறவு ஆழமானது. அதில் இருந்து விலகிச் சென்றால் நமக்கு பாதிப்பு ஏற்படும். அறிவு என்பது இயற்கையிடம் இருந்து கிடைப்பதுதான். அதைக் காப்பாற்ற வேண்டும். நமது பாரம்பரிய விதைகளை நம்மிடம் இருந்து படிப்படியாக அப்புறப்படுத்த முயற்சி நடக்கிறது. இது நடந்தால் நமது விவசாயிகள் பன்னாட்டு பண்ணைகளிடம் அடிமையாக நேரிடும்’’ என அவரது பாணியில் பேசினார்.

இக்கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட 800 வகையான பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள் உள்ளிட்டவை காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்வையிட்டு, அவை குறித்து அறிந்துகொண்டனர். தங்களுக்கு தேவைப்படும் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்தக் கண்காட்சி குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் கூறுகையில், “ தக்காளியைப் பொருத்தவரை அவற்றில் 200 ரகங்கள் உள்ளன. இதில் 105 ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மிளகாய் வகையில் 60 ரகங்களும், சுரைக்காயில் 50 ரகங்களும், கத்தரிக்காயில் 60 ரகங்களும், பரங்கிக்காயில் 40 ரகங்களும், வெள்ளைப் பூசணியில் 5 ரகங்களும், பீர்க்கன் காயில் 15 ரகங்களும், மூலிகை செடிகள் 60 ரகங்களும், மரவள்ளிக்கிழங்கு உட்பட பல்வேறு கிழங்கு வகைகளில் 100 வகைகளும், மூலிகை செடிகள் 60ம், வெண்டையில் 40 ரகங்களும் என மொத்தம் 800 வகையான காய்கறி விதைகள், கிழங்கு வகைகளின் விதைகள், கீரை வகைகளின் விதைகள் விற்பனைக்கும், பார்வைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

கத்தரிக்காயை பொறுத்தவரை 600 ரகங்கள் உள்ளன. இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது 60 ரகங்கள்தான். இதுவரை எங்கள் கூட்டமைப்பு 200 பாரம்பரிய காய்கறி, கிழங்கு, கீரை வகைகளை மீட்டெடுத்துள்ளன. இங்கு வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, ராமநாதபுரம், மதுரை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து விதை சேகரிப்பாளர்கள் வந்துள்ளனர். நாங்கள் விவசாயிகளை தேடிச் சென்று விதைகளை வழங்கி அவற்றின் பயன்பாடு, உற்பத்தி தொடர்பாக விளக்கியும் கூறுகிறோம். எங்களைத் தேடி வருபவர்களுக்கும் விதைகளை வழங்குகிறோம்’’ என்றார்.

 

You may also like

Leave a Comment

sixteen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi