முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி ரூ.2.38 கோடி 4 வாரங்களில் வழங்கப்படும்: ஐகோர்ட்டில் தமிழக அரசு உத்தரவாதம்

சென்னை: முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டண பாக்கி 2.39 கோடி ரூபாய் நான்கு வாரங்களில் வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. அரசு வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்குவது தொடர்பான வழக்கில், கட்டணங்கள் முழுமையாக வழங்காதது ஏன் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், முன்னாள் அட்வகேட் ஜெனரல், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டிய கட்டணங்களில் 23.60 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.

தற்போதைய அரசு வழக்கறிஞர்களுக்கான 673 கட்டண பில்களில், 199 பில்களுக்கான கட்டணங்கள் 10 நாட்களில் வழங்கப்படும். முன்னாள் அரசு வழக்கறிஞர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாக்கி கட்டண தொகையான 2.39 கோடி ரூபாய் 4 வாரங்களில் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

மிலாது நபி விடுமுறை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

விடுதலைக்காகவும், சமூக உரிமைகளுக்காக பாடுபட்டவர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்