Saturday, September 7, 2024
Home » சமையலில் மணக்கும் மருத்துவம்

சமையலில் மணக்கும் மருத்துவம்

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

இந்த பூமியில் விளையும் ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணமும் சுவையும் உண்டு. இப்படி சத்தும் சுவையும் நறைந்த உணவுகளை உண்பதன்மூலம் நோய்களிலிருந்து நாம் விடுபடலாம். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

வாழைப்பூ: துவர்ப்புச்சத்து நிறைந்த வாழைப்பூவைச் சாப்பிடுவதால் ரத்தம் விருத்தியாகும். பேதி, சீதபேதி குணமாகும். வயிற்றுப்புண் ஆறும். வாய்நாற்றம், வியர்வை நாற்றம் போகும். உடல் எரிச்சல் நீங்கும்.

வாழைக்காய்: வாழைக்காயை சமைத்துச் சாப்பிட நாக்கில் ருசி கிடைக்கும். சூடு தணிவதுடன் உடல் பலம் பெறும். அதிகம் சாப்பிட்டால் வாய்வு அதிகரிக்கும்.

வாழைத்தண்டு: வாழைத்தண்டை சமைத்துச் சாப்பிட நீர்ச்சுருக்கு சரியாகும். குடலில் உண்டாகும் கற்களையும், சிறுநீரகக் கற்களையும் கரைத்து வெளியேற்றும். துர்நீரை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.

அத்திக்காய்: அத்திக்காயை சமைத்து உண்ண வயிற்றுப்புண், கருப்பை ரணம் ஆறும். உடல் சூடு தணியும். வாய் நாற்றம் நீங்குவதுடன் பித்தம் விலகும். பெரும்பாடு நீங்கும். மலச்சிக்கல் குணமாகும்.

சேப்பங்கிழங்கு: சேப்பங்கிழங்கு சமைத்துச் சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, மலச்சிக்கல் நீங்கும். கோழைக் கட்டு வயிற்றுப்புண் சரியாகும்.

கருணைக்கிழங்கு: கருணைக்கிழங்கு சமைத்துச் சாப்பிட்டு வந்தால் மூலம் சரியாகும். வயிற்றுப்புண், வாய்வு, பித்தக் கோளாறுகள் சரியாகும். ரத்த மூலத்துக்கு கருணைக்கிழங்கு நல்லது. பெண்களைப் பாடாய்ப்படுத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் சரியாகும்.

உருளைக்கிழங்கு: வாய்வு தொல்லை இருந்தாலும், ருசி நிறைந்தது. இதைச் சாப்பிடுவதால் உடல் பலம் பெறும். இது மலத்தை இளக்குவதுடன் சோர்வை நீக்கும்.

பீட்ரூட்: சர்க்கரைச்சத்து நிறைந்தது. இதை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் ஊறும். குறிப்பாக ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன் முகம் அழகு பெறும். இருமல், சோர்வு நீங்கும்.

பீன்ஸ்: பீன்ஸை சமைத்துச் சாப்பிட்டால் மூளை பலம் பெறும். புண்களை ஆற்றும். பாஸ்பரஸ் சத்து நிறைந்தது என்பதால் பீன்ஸை அடிக்கடி சாப்பிடலாம்.

நெல்லிக்காய்: கல்ப உணவு, குளிச்சியானது. தங்கச்சத்து உள்ளது. இது பலம் தரக்கூடியது. பித்தம் போகும். ஞாபக சக்தியை தரும், நரைமுடியை கருக்கச் செய்யும் நரம்புக்கு பலம் தரும். ஊளைச்சதையை நீக்கும். சோர்வை நீக்கும்.

பச்சை மிளகாய்: பச்சை மிளகாயை சமையலில் சேர்த்துக் கொண்டால் பசி அதிகரிக்கும். உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் என்பதால் இது செரிமானக் கோளாறுகளைப் போக்கும். மூட்டு வலி, கீல் வாதம் போக்கும்.

வெண்டைக்காய்: வெண்டைக்காய் சமைத்து உண்ண மூளை வளர்ச்சி அடையும். ஞாபக சக்தி மிகும். சீதபேதி குணமாகும்.

முள்ளங்கி: முள்ளங்கி சமைத்து உண்ண சூடு தணியும். வாய்வை நீக்கும். நீரை வெளியேற்றும். சிறுநீர் பெருகும். வீக்கம் வடியும். நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும். மார்பு வலி நீங்கும்.

சிவப்பு முள்ளங்கி: சிவப்பு முள்ளங்கி சமைத்து உண்ண சருமம் அழகு பெறும். கண்பார்வை ஒளிதரும். ரத்தப் பெருக்கு உண்டாகும். நரம்புகளுக்கு வலு உண்டாகும்.

தக்காளி: தக்காளி சமைத்து உண்ண உடல் சூடு தணியும். ரத்தவிருத்தி உண்டாகும். உடல் வலியும், பொலிவும் பெறும். ரத்த ஓட்டம் சீராகும். தோல்வியாதி நீங்கும்.

வெங்காயம்: வெங்காயம் சமையலில் சேர்க்க ருசி தரும். மணம் தரும். ரத்த ஓட்டம் சீராகும். மண்ணீரல் கோளாறுகள் அகலும், கண்நோய் நீங்கும். சரும நோய்கள் அகலும் அம்மை தடுப்பு மருந்தாக பயன்படும்.

வெள்ளைப் பூண்டு: வெள்ளைப் பூண்டை சமையலில் சேர்க்க உணவு மணம் தரும். கிருமிகளை வெளியேற்றும். ரத்த கொதிப்பு தீரும். சளி, இருமல் தீரும். ரத்தம் சுத்தியாகும்.

சீரகம்: தங்கச்சத்து உள்ளது. சமையலில் சேர்த்தாலும் ரசத்தில் சேர்த்தாலும் உபயோகப்படுவதோடு, குடிநீர் செய்து உபயோகித்தாலும், பித்தம் அகலும். அக உறுப்புகளின் இயக்கத்தை சரிசெய்யும், கண்பார்வை தரும். கல்ப உணவாகும். பசி தரும்.

கொத்துமல்லி: கொத்துமல்லி சமையலில் சேர்க்க உட்சூடு தணியும். பித்தம் அகலும். நாட்பட்ட சீதபேதி, மூலம் தீரும்.

மஞ்சள்: மஞ்சள்தூளை சமையலில் சேர்க்க உணவு ருசி தரும். கிருமிகள் நாசமாகும். தோல் நோய் அகலும். இதை முகத்தில் பூசி வர மாசு மருக்கள் நீங்கும்.

தொகுப்பு: ரிஷி

You may also like

Leave a Comment

10 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi