விருதுநகர்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், விருதுநகர் அருகே ரோசல்பட்டி குமராபுரம் இந்திரா காலனியில் வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்தார்.பிறகு விருதுநகர் வி.வி.வி.அரங்கில் நடைபெற்ற பாஜ கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ பெரும்பான்மையுடன் ஆளும் மாநிலங்கள் தவிர கூட்டணி ஆட்சி அமைத்த இடங்களில் ஆட்சியில் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது. யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் கொண்டு வரப்பட உள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். ராணுவத்திற்கு எதிரான, தேசத்திற்கு எதிரான கருத்துடைய பதிவுகளை அனுமதிக்க இயலாது. அடிப்படை சுதந்திரம் இருந்தாலும் கூட நாட்டு நலனுக்கு எதிரான எந்த விஷயத்தையும் அனுமதிக்காத வகையில் கட்டுப்பாடுகள் இருக்கும்’’ என்றார். தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்கப்படாதது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘‘டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷனுக்கு ஒத்து வந்தால் நிதி வழங்கப்படும்’’ என்றார்