சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னையில் கடந்த 5-7-2024 (வெள்ளிக்கிழமை) அன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத சில நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது இறுதி மரியாதைக்குத் தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் அரசின் சார்பில் செய்து தரப்பட்டன.
இந்நிலையில், இன்று முதலமைச்சர், சென்னை, அயனாவரம் பகுதியில் அமைந்துள்ள .ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, ஆம்ஸ்ட்ராங் அவர்களின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து, தனது ஆழ்ந்த அனுதாபத்தினையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, இந்தக் கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
இச்சந்திப்பின்போது, முதலமைச்சர் அவர்களுடன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்களும் உடனிருந்தார்.