சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டை கைமாற்றிய பிரபல ரவுடி அப்புவை டெல்லியில் தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்டாங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த புதூர் அப்பு மீது மயிலாப்பூரில் பில்லா சுரேஷ், விஜி ஆகிய இரட்டை கொலை வழக்கு், கோடம்பாக்கம் சிவா கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் கேட்டு வழக்கறிஞர் அருள் ரவுடி புதூர் அப்புவை நாடியதாகவும், அதன் பேரில் 4 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்ததாகவும் குறிப்பாக முதலாவதாக தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை கும்மிடிப்பூண்டியில் கொண்டு சென்று வெடித்த போது போதுமான வீரியம் இல்லாததால் மீண்டும் ஆந்திராவில் இருந்து மருந்துகளை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டை தயார் செய்ததாகவும் புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கியை எடுத்தால் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றதும், ஆனால் அவற்றை பயன்படுத்தாத காரணத்தினால் அங்கேயே நாட்டு வெடிகுண்டுகளை விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைதான புதூர் அப்புவின் கூட்டாளிகள் ராஜேஷ், கோபி, குமரன் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து ஹரிகரனிடம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதூர் அப்புவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு டிரான்ஸிட் வாரன்ட் பெற்றுக்கொண்டு சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.