ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் ஒரு வக்கீலிடம் விசாரணை

பெரம்பூர்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒரு வழக்கறிஞரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அருள், பொற்கொடி, ஹரிஹரன், சிவா உள்பட 5 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அருள் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஹரிகரன், சம்பவ செந்திலுக்கு நெருக்கமானவர். இவர் மூலம் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. இந்தநிலையில் தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக வழக்கறிஞர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் சிவாவுடன் இவர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். எனவே தொடர்ந்து வழக்கறிஞரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவைப்படும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்டால் கொலை வழக்கில் 6வதாக மேலும் ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்படுவார். அதே நேரத்தில் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வரும் ஹரிஹரனுக்கு இன்றுடன் காவல் முடிவடைவதால் தனிப்படை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்க உள்ளனர். கடந்த 5 நாட்களாக தனிப்படை போலீசார் ஹரிகரனிடம் பல்வேறு தகவல்களை பெற்றுள்ளதாகவும் அதன் அடிப்படையில் தினமும் 10க்கும் மேற்பட்டவர்களை எழும்பூர் காவலர் குடியிருப்பு பகுதி உள்ள இடத்துக்கு வரவழைத்து ரகசியமாக விசாரணை நடத்தி மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்