அதுபோல், இதுவரை 23 பேர் வரை கைது ஆகியுள்ளனர். இவர்களை போலீசார் ஒவ்வொருவராக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர். இவர்களிடம் தனித்தனியாகவும் நேருக்கு நேராகவும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் அளிக்கும் வாக்குமூலங்கள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல்களை அடிப்படையாக வைத்தே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் சம்பவ செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள். தற்போது அவர் தாய்லாந்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை விரைவில் கைது செய்ய போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ரவுடி நாகேந்திரன் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் அஸ்வத்தாமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது ஆம்ஸ்ட்ராங்குடன் மிக நெருக்கமான சூழலை கடைபிடித்துள்ளார். மேலும் “உங்களுக்கும் அப்பாவுக்கும்தானே முன்விரோதம். நான் இணக்கமாக செல்ல விரும்புகிறேன்” என்று ஆம்ஸ்ட்ராங்கை அங்கிள் என்றே அழைத்தாராம் அஸ்வத்தாமன். அவருடன் நட்புடன் இருப்பது போல் நடித்தேன். இல்லாவிட்டால் மாமூல், அரசியல் எதிர்காலம் என அனைத்துமே பூஜ்ஜியம் ஆகிவிடும் என்பதால் நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல சொன்னேன் என அஸ்வத்தாமன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.