ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூவிருந்தவல்லி கிளை சிறையில் உள்ள ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அருள், ராமு, ஹரிஹரன், சிவசக்தி ஆகிய 5 பேரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர். 5 பேரையும் 7 நாட்கள் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் மனுவில் கோரியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த எழும்பூர் நீதிமன்ற நடுவர் ஜெகதீசன், பொன்னை பாலு, அருள், ராமு ஆகியோரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
ஹரிஹரன், சிவசக்தி ஆகிய இருவருக்கும் 5 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் 5 பேரையும் பூவிருந்தவல்லி கிளை சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த ரவுடி திருவேங்கடம் போலீஸ் காவலின் போது தப்பியோட முயன்றபோது என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.