ஆற்காடு : ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவும், பகலில் கடும் வெயிலும் என பொதுமக்களை அவதிக்குள்ளாக்கி வருகிறது.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனால் பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் வருவதற்கு பல நாட்கள் உள்ள நிலையில், கடுமையான வெயிலின் தாக்கம் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ளது.இந்நிலையில், நேற்று அதிகாலை கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. ஆற்காடு பைபாஸ் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பொழிவால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றன. மேலும், அதிகாலை நடைபயிற்சிக்கு சென்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதேநேரத்தில், நேற்று பகலிலும் கடும் வெயில் வாட்டி வதைத்தது.