அரியலூர்,நவ. 7:அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில்,மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 310 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக உலக சுற்றுலா தினவிழா 2023 சார்பாக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் தொழிற்பயிற்சி மைய மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் சார்பாக அமைக்கப்பட்டுள்ள துணிப்பை வழங்கும் இயந்திர செயல்பாட்டினை துவக்கி வைத்து, மீண்டும் மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஏற்படுத்தினார். மேலும், இந்த இயந்திரமானது ரூ.10 தொகையினை செலுத்தி துணிப்பையினை பெற்று கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.