சென்னை: மறைந்த பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட இவாஞ்சலிகள் சர்ச் ஆப் இந்தியா பேராயராகவும் இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்தவர் பேராயர் எஸ்றா சற்குணம் 86 வயதான அவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த 22ஆம் தேதி எஸ்ரா சர்குணம் காலமானார். அவரது உடலுக்கு கிறிஸ்தவ சமூக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.
மறைந்த எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுவதை அடுத்து சென்னையை அடுத்த வானகரத்தில் நல்லடக்க ஆராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராயர் சர்குணம் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலிக்கு பிறகு பேராயர் எஸ்றா சற்குணத்தின் உடல் இன்று மாலை கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.