டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், அமலாக்கத்துறை கைதை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும் எனவும் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் மக்களவை தேர்தலையொட்டி கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி கடந்த மே 10ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இடைக்கால ஜாமீன் முடிந்து கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைந்தார். இதனிடையே உடல்நிலை பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கடந்த மாதம் டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அத்துடன் அவரது நீதிமன்ற காவலை ஜூன் 19 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.