சென்னை: சென்னை ரயில்வே கோட்டம், கதி சக்தி மல்டிமோடல் கார்கோ டெர்மினல் பாலிசி-2022 திட்டத்தின் கீழ், ஒரு அதிநவீன ரயில்வே சரக்கு கையாளும் முனையத்தை நிறுவுவதற்கும், இயக்குவதற்கும் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டர் ரயில்வே நிலப்பரப்பில் நிறுவப்பட உள்ளது.இந்த புதிய ரயில்வே முனையம் பயன்பாட்டிற்கு வரும்போது ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம் இத்திட்டத்தில் சுமார் ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை முதலீடு செய்துள்ளது. இங்கு சரக்குகளை ஏற்ற, இறக்க நவீனமயமாக்கப்பட்ட வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை உருவாக்க தனி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கான ஒப்பந்த காலம் 35 ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தின் இந்த சிறப்பு திட்டம் மூலம் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதுடன் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.